இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்ட நிலையில், சென்னையில் வாகன ஓட்டிகள் சோதனைக்காக நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சில தளர்வுகளையும் அண்மையில் அறிவித்தது.
அதன்படி, பொதுமக்கள் அநாவசியமாக வெளியே செல்வதை தடுக்க இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டம் – மாவட்டம் செல்ல, இ-பாஸ் முறைக்கு பதிலாக இ-பதிவு முறை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறை நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது.
அத்தியாவசியப் பணிகளான திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகிய பணிகளுக்கு மட்டுமே, eregister.tnrga.org என்ற இணையபக்கத்தில் உரிய ஆவணங்களை சமர்பித்து இ-பதிவு மூலம் அனுமதி பெற்று பயணம் மேற்கொள்ளலாம்.
இதனிடையே, இ-பதிவு நடைமுறைக்காக சென்னையை 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல இ-பதிவு முறை அவசியம் என்று சென்னை மாநகர காவல்துறை நேற்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று காலை 10 மணி முதலே போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபட ஆரம்பித்தனர். இதற்காக, பல்வேறு இடங்களில் வாகன சோதனை சாவடிகளை அமைத்து, இ-பதிவு விபரங்களை ஆய்வு செய்ய தொடங்கினர். இதனால், சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏற்கனவே, கொரோனா பரவல் உச்சகட்டத்தில் இருந்து வரும் நிலையில், இந்த இ-பதிவு முறையினால் ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசல், மேலும் கொரோனா தொற்று பரவலை அதிகரிக்கும் சூழலை ஏற்படுத்தியது.