திருச்சி அருகே உள்ள தனியார் குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று திருச்சி உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு செய்தனர்.
அப்போது பன்னீர், பிளாக், ஆரஞ்சு மற்றும் லெமன் உள்ளிட்ட சுமார் 4,400 குளிர்பான பாட்டில்களில் எளிதில் அழிக்கக்கூடிய மையினால் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி எழுதப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
அதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து பிணை பத்திரம் போடப்பட்டு ஒரு அறையில் பூட்டி சீல் செய்யப்பட்டு பிரிவு 55-இன் கீழ் ஒரு வார காலத்திற்குள் இனி தயாரிக்கும் குளிர்பானங்கள் அனைத்தும் அழியாத மையினால் அச்சிடப்பட வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், இதுபோன்று குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அழியாத மையினால் அச்சிட வேண்டும் என்றும், உணவு வணிகர்களும், பொதுமக்களும் இதுபோன்ற குளிர்பானங்களில் தயாரிப்பு தேதி இல்லாமல் கண்டறிந்தால் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு 99449 59595, 95859 59595 என்ற எண்ணிலும், மாநில புகார் எண் 9444042322 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வராஜ், ஸ்டாலின், மகாதேவன் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தார்