பழனி: பழனி கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திண்டுக்கல் வந்திருந்தார். இந்நிலையில் பழனி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று மாலை 7 மணி அளவில் வந்தார். பின்னர் மின் இழுவை ரயில் மூலம் பழனி மலைக் கோவிலுக்கு வந்த ஆளுநருக்கு பழனி கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பழனியாண்டவர் சந்நிதிக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முருகப் பெருமானை தரிசித்தார். ஆளுநருடன் தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் வந்திருந்தனர்.
ஆளுநரின் வருகையை முன்னிட்டு பழனி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.