பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில், தமிழக டிஜிபி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து அறிக்கை கேட்கப்பட்டது. இந்த அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் ஒரு வார கால அவகாசம் கேட்கப்பட்டது.
அரசுத் தரப்பின் இந்தக் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ‘தொடர்ந்து கால அவகாசம் கோருவது நீதிமன்ற அவமதிப்பு. ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் டி.ஜி.பி.யை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’ என்று எச்சரித்தனர்.
மேலும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு 104 போலீசார் நியமிக்கப் பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் அதைக் கூட நீதிமன்றத்தில் அறிக்கையாக போலீசார் தாக்கல் செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.
இதை அடுத்து, அடுத்த கட்ட விசாரணையை வரும் 7-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.