அரசு அலுவலகங்கள், பொது இட சுவர்கள் எல்லாம் விளம்பரங்கள் செய்வதற்கான இடம் என்பது எழுத படாத விதியாகத் திகழ்கிறது.
சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டி, அசிங்கப் படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் அதிகம். கட்சி சுவரொட்டிகள், விளம்பர வாசகங்கள், காதுகுத்து, புனிதநீராட்டு, கல்யாண வாழ்த்து என சுவரொட்டிகள் ஒட்டப் படாத அழகிய சுவர்களைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது.
அழகாக வெள்ளை அடித்து இங்கே நோட்டீஸ் ஒட்டாதீர் என்று எழுதியிருந்தால், அதன் மேல்தான் சுவரொட்டியை ஒட்டிச் செல்வது நம் மக்களின் குயுக்தி! வீம்பு!
இந்நிலையில் சில பொதுக் கட்டடங்களில் சுவர்களில் ஓவியங்கள் வரைந்து வைத்து சுவர்களை அழகாக்கி வருகின்றனர். இதனால் அவற்றில் சுவரொட்டியை ஒட்டுவதற்கு பெரும்பாலானவர்களுக்கும் தயக்கம் வரும்.
அப்படி ஒரு பள்ளிச் சுவர்தான் இப்படி அழகிய ஒவியமாக மின்னுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா தேர்க்கன் குளம் பள்ளிக்கூட வெளிப்புறச் சுவர் ஓவியம் ரயில் பெட்டியின் வடிவத்தில் அழகாக மின்னுகிறது. ரயிலில் பயணம் செய்வது போன்ற உணர்வை இவை ஏற்படுத்துகின்றன.