குற்றாலத்தில் சீஸன் பரவாயில்லை என்று சொல்லும் அளவில்தான் உள்ளது. அருவிகளில் எதிர்பார்த்ததுபோல் அதிக அளவு தண்ணீர் இல்லை. ஆனாலும் ஓரளவு சுமாராக விழுகிறது.
திருக்குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் சுமாராக தண்ணீர் விழுகிறது. குறைவான தண்ணீரிலும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து, வரிசையில் நின்று குளித்து வருகின்றனர். பெண்கள் பகுதியில் சுமாராகத்தான் நீர் விழுகிறது.
தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அதிக வெயில் இல்லை. சிலுசிலு வென காற்றும் அடிக்கிறது. குளுகுளு குற்றாலத்தின் சாரல் தன்மையை புதன்கிழமை இன்று காண முடிந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று தெரிவித்துள்ளார். தேனி, நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மேலும் சென்னை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தற்போது கேரளத்திலும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளது. இதனால் அங்கும் மழை பெய்து வருகிறது. இதனால் அடுத்த இரு தினங்களில் குற்றாலம், செங்கோட்டை வனப் பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் காரணத்தால் அருவிகளிலும் நீர் வரத்து நன்றாகவே இருக்கும் என்பதால், இந்த வார இறுதி நாட்களில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.