சென்னை எம்கேபி நகரை சேர்ந்த சார்லஸ் ராஜ்குமார் (32), பவித்ரா தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில், சார்லஸ் வியாசர்பாடியை சேர்ந்த ரமணி (35) என்ற பெண்ணை கடந்த ஆண்டு 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், ரமணி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், சார்லஸ் ரமணியை சமாதானம் செய்து தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது, மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சார்லஸ், மனைவி ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரமணி துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சார்லஸ் ராஜ்குமாரை கைது செய்தனர்.
ரமணிக்கும், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும், இதுபற்றி அறிந்த சார்லஸ் ராஜ்குமார் ஆத்திரமடைந்து, மனைவியை கொலை செய்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.