புகார்கள் கூறப்பட்டு, தங்கள் கவனத்துக்கு வந்ததும் சர்ச்சைக்குரிய படங்களை நீக்கி விட்டதாக லயோலா கல்லூரி நிர்வாகம் சொல்லும் சால்ஜாப்பு பச்சைப் பொய் என்று காட்டத்துடன் கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது…
வீதி விருது விழாவிற்கு வழங்கிய அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது கவனத்துக்கு வந்தவுடன் சர்ச்சைக்குரிய பதாகைகள் அகற்றப் பட்டுவிட்டன என்று லயோலா கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது பச்சைப் பொய். 2 நாள் கண்காட்சி நேற்று மாலை 6 மணிக்கு முடிவடையும் போதுதான் அவை படமெடுக்கப் பட்டன…!
முன்னதாக, சென்னை லயோலா கிறித்துவக் கல்லூரியில் கண்காட்சி என்ற போர்வையில் பாரதப் பிரதமர் மோடிஜி அவர்களையும் இந்துமத அடையாளங்களையும் இழிவுபடுத்திய ஈனச்செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. தமிழக காவல்துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் ஹெச்.ராஜா.
மேலும், பாரதமாதாவை, பாரதப் பிரதமரை, இந்து மதத்தை இழிவு படுத்தும் லயோலா கிறித்துவக் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுக்க டிஜிபி அலுவலகம் முன்பு 11.30க்கு அனைத்து தேசபக்தர்கள் இந்து உணர்வாளர்கள் வரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து இன்று காலை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப் பட்டது.
இது குறித்து தெரிவித்த ஹெச்.ராஜா, சென்னை லயோலா கிறித்துவக் கல்லூரியில் கல்லூரியில் வி.சி.க,கம்யூனிஸ்ட், நக்ஸல் கிறித்தவ மதமாற்றம் செய்யும் தீயசக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து திட்டமிட்ட விதத்தில் இந்து மதம் மற்றும் தேசத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காவல்துறையில் நேரில் புகார் அளிக்கப்பட்டது என்றார்.