அத்திவரதரை வெளியே எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை என்று அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காஞ்சி அத்திவரதர் குளத்தில் இருந்து வெளியில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பக்தர்கள் பார்ப்பதற்கு அனுமதி இல்லை! குளத்து மண்டபத்திற்கு செல்ல பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளது!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒருமுறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்! இந்த வைபவம் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைபெறுகிறது!
அதற்கு முன்னதாக கோவில் குளத்தில் நான்கு கால் மண்டபத்தின் அடியில் இருக்கும் அத்திவரதர் வரும் 29ஆம் தேதி இரவு வெளியே எழுந்தருளச் செய்யப் படுகிறார். பெருமாளை வெளியில் எழுந்தருளச் செய்ய குறைந்தது 5 மணி நேரம் ஆகும் என்று தெரிகிறது. அதன் பிறகு ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறும்!
குளத்திலிருந்து அத்தி வரதரை வெளியில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை வைத்து இருந்தது! ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது !
மேலும் சுவாமியை வெளியில் எழுந்தருள செய்த பின்பும் குளத்திலுள்ள மண்டபத்தை காணச் செல்ல பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு ராஜகோபுரம் வெளி மற்றும் உள் புறம் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவிலில் ஏற்கனவே ஒவ்வொரு சன்னதி பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த வைபவத்திற்காக பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் வழிகளில் 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. வசந்த மண்டபம் எதிரில் மண் மேடாக இருந்த பகுதிகளில் சிமெண்ட் கற்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது!