கிருஷ்ணகிரி அருகே மதுபாட்டில்கள் வாக்குவதற்காக டாஸ்மாக் கடையில் நிற்கும் பெண்கள் இப்போது அதிர்ச்சிகரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஆண்களுக்கு நிகராக பெண்கள் டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று மதுபாட்டில்களை வாங்கி மது அருந்தும் சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சி அளிப்பாக உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று வலியுறுத்தி, கிராமங்களிலும் சிறு சிறு நகரங்களிலும் பெண்கள் சார்பில் ஒரு புறம் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தில் மதுக்கடைக்கு பெண்கள் திரண்டு வந்து மது வாங்கிச் செல்வது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கடைக்கு திரண்டு வரும் பெண்கள் ஆண்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, வரிசையில் நின்று, மது பாட்டில்களை தங்கள் சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு செல்கின்றனர். சிலர் பார்வையில் படும் வகையிலேயே கொண்டு செல்கினனர்.
சிலர் இரண்டு மூன்று பாட்டில்களை கைகளில் மொத்தமாகப் பிடித்துக் கொண்டு வெளிப்படையாகவே காட்டிச் செல்கின்றனர்.
நகர்ப் பகுதிகளில் தான் சில இடங்களில் பெண்கள் நாகரீகம் கலாசாரம் என்ற பெயரில் மது குடிப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
அண்மையில் பொள்ளாச்சியில் உள்ள தனியார் சொகுசு விடுதி மற்றும் மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதி ஆகியவற்றில் மதுபானங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள், ஐ.டி. பெண் ஊழியர்கள் பிடிபட்டு உள்ளனர்.
ஆனால் இந்த ஊத்தங்கரை கிராமத்திலோ, பெண்களே மதுக்கடைகளைத் தேடிச் சென்று, மது வாங்கி பெண்கள் குடிப்பது வருத்தமாக உள்ளது. இது கலாசார சீரழிவையே காட்டுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இருப்பினும், சில மூதாட்டிகள், பெண்கள் டாஸ்மாக் கடை திறந்திருக்காத நேரம், அல்லது காலை நேரத்தில் உடன் இருப்பவர்களுக்கு டாஸ்மாக் வாங்கிக் கொடுப்பதற்காக முன்னதாகவே அதிகம் வாங்கி வைத்துக் கொண்டு, பின்னர் அதிக விலைக்கு விற்று காசு பார்க்கும் எண்ணத்துடனும் வாங்கிச் செல்கிறார்கள் என்று கூறப் படுகிறது.