தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2019-20 ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டி தென்காசியில் நடந்தது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இதே போல தென்காசி மாவட்டம், செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிளான கூடைபந்து போட்டி நடந்தது. இந்தப் போட்டியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் தொடங்கி வைத்தார். இதில் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், இடைகால் ஆகிய அணிகள் கலந்து கொண்டன.
விறு விறுப்பாக நடந்த இந்த கூடைப்பந்து போட்டியில், செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், செங்கோட்டை ரெட் போர்ட் பி அணி 2-வது இடமும், சங்கரன்கோவில் அணி மூன்றாம் இடமும் பெற்றன.
இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நீச்சல் கழகச் செயலாளர் லட்சுமணன், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி வாரியத் தலைவர் திலகர், டாக்டர் ராமச்சந்திரன், ரெட்போர்ட் கூடைப்பந்து கழகத் தலைவர் மாதவன், செயலாளர் கோதர்ஷா, பொருளாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை செங்கோட்டை ரெட்போர்ட் கூடைப்பந்து கழகம் செய்திருந்தனர்.