கோடி கோடியா கொட்டி போட்ட மலைப் பாதைங்க இது… இத இப்படி நாசம் செய்யுறாங்களே… கொஞ்சம் என்னான்னு தான் கேளுங்களேன்… – என்று தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள், மலைக்கு வரும் பக்தர்கள்.
நெல்லை மாவட்டம், கேரள எல்லையில் அமைந்திருக்கிறது, செங்கோட்டை அருகில் உள்ள திருமலைக்கோவில். இங்கே உள்ள முருகன் திருக்கோவில் மிகவும் பழைமையானதும் புகழ்பெற்றதுமாகத் திகழ்கிறது.
அண்மைக் காலம் வரை மலைக்குச் செல்ல படிகளில்தான் ஏறிச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் தற்போது, நீண்ட திட்டமிடலுக்குப் பின்னர் மலைக்கு மேலே செல்ல அழகிய மலைச் சாலை போடப் பட்டுள்ளது.
கோடி கோடியாகக் கொட்டி, பக்தர்களின் வசதிக்காக மலைக்கு மேல் செல்வதற்கு பாதை அமைக்கப் பட்டிருக்கிறது. இதன் பின்னர், இந்த சுற்றுவாட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டுமல்ல, கேரளத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலைக் கோவிலுக்கு வருகிறார்கள்.
கேரளத்தின் தென்மலை, அச்சங்கோவில், ஆரியங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா வருபவர்கள், அப்படியே திருமலைகோவிலுக்கும் வந்து செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது, கேரளத்தில் இருந்து வரும் இஸ்லாமியர்களும் கூட திருமலை கோவில் மலை மீது நின்று, சுற்றிலும் மேகம் தொட்டுத் தவழும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை நின்று ரசித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், திருமலைக்கோவில்ன் மேலே தியான மண்டபம் உள்ளது. அடுத்து தற்போது கும்பாபிஷேகத்துக்காக யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்கு சரள் மண் வெளியிருந்து விலைக்கு வாங்குவதற்கு பதிலாக மலைப்பாதையின் ஓரத்தில் இருக்கும் பாறைகளை சேதப்படுத்தி மண் அள்ளி வருகின்றனர்.
பல கோடி ரூபாய்களை செலவழித்து உருவாக்கப்பட்ட மலைப்பாதை இதனால் வெகுவாக பாதிக்கும் என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.