மதிமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த மாநாடு நடைபெற உள்ளது.
சென்னையில் மாநாடு நடத்துவதை தவிர்த்து வருபவர் வைகோ. ஆனால் இந்த ஆண்டு அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்துவதாக அறிவித்திருந்தார் வைகோ.இந்நிலையில் உடல்நலமின்றி அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். மருத்துவர்கள் கண்டிப்பாக ஓய்வும், மன அமைதியும் தேவை என தெரிவித்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுவதை குறைந்தது ஒரு மாதத்திற்காவது தவிர்க்குமாறு வைகோவுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிகமாக பேசினால் உடல் நலனுக்கு உகந்ததல்ல என்பது டாக்டர்களின் அறிவுரையாகும்.இதனைக் கருத்தில்கொண்டு அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டை ஒத்திவைக்கலாம் என சில கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநாட்டுக்கு கதநாயகனாக அழைக்கப்போவதாக கூறப்பட்ட சிறப்பு அழைப்பாளர் பரூக் அப்துல்லாவும் காஷ்மீரில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் அதனை வைகோ ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கால் நூற்றாண்டிற்கு பின்பு மாநிலங்களவை உறுப்பினராக அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழாவை கொண்டாட உள்ளதால், அதை தள்ளிவைக்க வேண்டாம் என நினைக்கிறாராம் வைகோ.