தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தர்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கட்சி வேறுபாடு இன்றி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு டிவிட்டர் செய்தியில்
பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி தமிழிசை அவர்களுக்கு வாழ்த்துகள்! அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன் – எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, தமிழிசையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஸ்டாலின்!
திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழிசைக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழிசை கடுமையாக உழைப்பவர். அதேபோன்ற உழைப்பை தெலங்கானா மக்களுக்கு செய்வார் என நம்புகிறேன்… என்று கூறியுள்ளார்.
கவர்னராக நியமிக்கப்பட்ட தமிழிசைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். டிசம்பர் மாதத்திற்குள் புதிய தலைவர் நியமிக்கப்படுவார். பா.ஜ.,வில் உழைக்க கூடிய அனைவருக்கும் அங்கீகாரம் கிடைக்கும். இதில், பா.ஜ.,வுடன் மற்ற கட்சிகளை ஒப்பிட்டு பேசக்கூடாது. பா.ஜ.,வுக்கு நிகராக எந்த கட்சியும் கிடையாது என்று கூறியுள்ளார் பாஜக.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
பாஜக.,தேசியச் செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில், தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரி திருமதி.Dr.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்…@DrTamilisaiBJP #tamilisai – என்று தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கையில், தெலங்கானா ஆளுநர் அன்பு மகள் தமிழிசைக்கு வாழ்த்து! என்று கூறியுள்ளார்.
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள் என்று எப்பொழுதும் என்னால் அழைக்கப்படும் (திரு.* குமரி அனந்தன் அண்ணாமலைப் பல்கலைக் கழக எனது சக மாணவத் தோழர்) டாக்டர் தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்… என்று தெரிவித்துள்ளார் கி.வீரமணி.