நடிகர் ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்கினால் அதற்கு தன்னுடைய முழு ஆதரவும் உண்டு என்று நடிகை நளினி பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.
நடிகை நளினி சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் என்னும் இடத்திற்கு அருகில் இருக்கும் நாவலூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய நளினி தமிழ் சினிமாவைப் பற்றியும் அதில் கூறப்படும் சமுதாய கருத்துகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திரைப்படங்களில் சமூக விழிப்புணர்வுக்கான முயற்சிகள் எடுக்கப்படுவது மிகவும் சந்தோஷத்தை அளிப்பதாகக் கூறினார்.
இதேபோல் சமூக சீர்திருத்தங்களுக்கு விழிப்பு உணர்வும் திரைப்படங்களில் கொண்டு வந்தால் அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என நளினி கூறினார்.
மேலும் திரைப்படங்கள் தணிக்கை சான்றிதழ் பெற்று தான் திரையிடப் படுகின்றன. அது போன்று சின்னத்திரை தொடர்களும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும் நளினி கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நளினி, நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை. நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்தாலும் சரி அல்லது அவர் தமிழக பாஜக.,வின் தலைவர் ஆனாலும் சரி அவருக்கு முழு ஆதரவை நான் அளிப்பேன்; அதனை வரவேற்பேன் என்று கூறினார்.