அலகாபாத்: நாட்டின் தற்போதைய பொருளாதார சரிவிற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரமே காரணம் என ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர், பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர் பைஜன் தாஸ்(55). இவர் உத்திரபிரதேச மாநிலத்தின் அலகாபாத்தை சேர்ந்தவர். இவர் செப்.,6 ம் தேதி விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். செப்.,8ம் தேதி நாள் முழுவதும் அறையை விட்டு பைஜன் வெளியே வராததால், விடுதி ஊழியர் அளித்த தகவலின் பேரில் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
அப்போது பைஜன், ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு 5 பக்க தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அத்துடன் தனது இறுதி சடங்குகளுக்காகவும், அறை வாடகைக்காகவும் ரூ.2000 வைத்துள்ளார். தனது நிதி நிலைமை மோசமாக உள்ளதால் தன்னால் அதற்கு மேல் பணம் தர இயலவில்லை எனவும் பைஜன் தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பைஜன் , பிரதமருக்கு எழுதிய தற்கொலை கடிதத்தில், “நாட்டின் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம். மோடி அரசு தான் பொருளாதார சரிவுக்கு காரணம் என யாராலும் கூற முடியாது.
முந்தைய காங்., ஆட்சியின் போது நடந்த ஊழல்கள், தவறான நிதி மேலாண்மை ஆகியவற்றால் ஓய்விற்கு பிறகு என்னால் எந்த தொழிலும் செய்ய முடியவில்லை. தவறான நிதி மேலாண்மை என்பது உடனடியாக வந்தது கிடையாது.
இது கடந்த சில ஆண்டுகளால் நடந்த தவறான நடவடிக்கை.மோடி அரசை மட்டும் பொருளாதார சரிவிற்கு காரணமாக குற்றம் சாட்டுவது தவறு. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ஏற்பட்டது தற்காலிகமான பாதிப்பு. பொருளாதார சரிவிற்கு இதை காரணமாக கூற முடியாது.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது தொடர்பான சில குறிப்புக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது மகனின் கனவை நிறைவேற்றும்படி பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ள பைஜன், தனது இறுதி சடங்குகளுக்கு தனது குடும்பத்தினரை அழைக்க வேண்டாம் என அலகாபாத் நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது உடலை மகன் பார்ப்பதை தான் விரும்பவில்லை எனவும், அலகாபாத்திலேயே தனது உடலை எரித்து விடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.