எல்லோருடனும் இணைந்திருக்கவே அம்பேத்கர் போராடினார்”- திருமாவளவன்
பட்டியலினத்தவர்களின் அமைப்புகள் அரசியலில் இணைந்து செயல்படுவதில் பல சிக்கல்கள் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரஞ்சித், வாக்களித்த பட்டியலின மக்களுக்காக எம்பி, எம்எல்ஏகள் பேச வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பட்டியல் சமூகத்திற்காக பேசினால் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அச்சப்படும் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கட்சியிலிருந்து வெளியே வந்தால், தாங்கள் அவர்களை தேர்தலில் வெற்றிபெற வைக்கிறோம் என்றார்.
மேலும், “தனித்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலின மக்களின் பிரச்னைகள் பற்றி பேச வேண்டாமா?. நம் பிரச்னைகளைப் பற்றி பேசுபவர்களை நாம் தேர்ந்தெடுப்போம்.
234 தொகுதிகளிலும் உழைக்க வேண்டாம்; 7 நாடாளுமன்ற தனித் தொகுதிகளில் உழைப்போம். பட்டியலின அமைப்புகளுக்குள் கூட்டணியை உருவாக்குவோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பட்டியலின அமைப்புகளைத் தேர்ந்தெடுப்போம்” என்று பேசினார்.
இந்நிலையில், இந்தக் கருத்து குறித்து புதிய தலைமுறையின் ‘அக்னி பரீட்சை’ நிகழ்ச்சியில், நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் எழுப்பிய கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்தார். அப்போது, பட்டியலினத்தவர்களின் அமைப்புகள் அரசியலில் இணைந்து செயல்படுவதில் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் “ஏற்கனவே சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக, பண்பாட்டு ரீதியாக அனைத்து தளங்களிலும் பட்டியலின மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எல்லோருடனும் இணைந்திருப்பது தான் அம்பேத்கரின் போராட்டம். பட்டியலினம் அல்லாத சமூகத்தை பகைக்க கூடிய அரசியலாக மாறும். இணைந்து செயல்பட முடியாத பிளவை உருவாக்கும். நடைமுறையில் அம்பேத்கரே இதை விரும்பவில்லை”. என தெரிவித்தார்.