பா.ஜ.க கூட்டணி குறித்த கேள்விக்கு தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்தார்.
மெகா கூட்டணி அமைக்கப் போவது காங்கிரஸ் அல்ல, பாஜக., தான் என்று தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறி வரும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் மெகா கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் இன்று கூறினார்.
மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, தேர்தல் வருகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம் என பதிலளித்துள்ளார்.
கூட்டணி அமைப்பதற்கு பழைய நண்பர்களுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பது குறித்து கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ்., தேர்தல் வருகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்றார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ஊகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாவதாகவும், அவசரப்படாமல், பொறுத்திருந்து பாருங்கள் நல்லது நடக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் உரிய கூட்டணி, மெகா கூட்டணி, மக்கள் விரும்புகின்ற கூட்டணி உறுதியாக அமைக்கப்படும் என்றார்.