போகாத ஊருக்கு வழி சொல்கிறார் ராகுல். சுவிட்சர்லாந்தில், வேலை, வருமானம் இல்லாத, 12 சதவீதம் பேருக்கு, ஆண்டுக்கு, 30 ஆயிரம், ‘யூரோ’வை, அந்நாட்டு அரசு வழங்கியது. இது, இந்திய ரூபாயில், 23.38 லட்சம். உதவி பெற்றவர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை; சோம்பேறிகளாகி, வீடுகளில் முடங்கினர்; போதை பழக்கத்திற்கு அடிமையாகினர். இது தொடர்பான ஓட்டெடுப்பில், திட்டத்தை செயல்படுத்த, 88 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்; பின்னர் திட்டம் கைவிடப்பட்டது.
இங்கிலாந்தில், 18 வயதுக்கு மேற்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கு, மாதம், 450 ‘பவுண்டு’ வழங்கப்பட்டது. இது இந்திய ரூபாயில் 41 ஆயிரம். இளைஞர்களும், இளம் பெண்களும் உல்லாசமாக வாழ்ந்தனர்; எதிர்கால லட்சியம், முன்னேற்றத்தை மறந்து, சோம்பேறிகளாக மாறி விட்டனர்.
ஆனால், பிரதமர் மோடி அப்படியில்லை. அனைவருக்கும் வீடு, ஒரு ரூபாயில், இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு, ஓய்வூதியம், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை திட்டத்தை செயல்படுத்தினார். மேலும், 12 கோடி விவசாயிகளுக்கு, நாற்று நடவும், உரம் வாங்கவும், அறுவடை செய்வதற்கும் என ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்திட்டத்தை அமல்படுத்தினார். வங்கியில் கடன் வாங்கி, திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, சுய தொழில் செய்து முன்னேறும் வேலை வாய்ப்புகளை, பிரதமர் மோடி உருவாக்கி கொடுத்துள்ளார்.
ஆனால், மாதம், 6,000 ரூபாய் என, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாயை இலவசமாக வழங்கி, மக்களை வேலைக்கு செல்லாமல், வீட்டில் முடக்கி வைக்கும் திட்டத்தை, ராகுல் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்தினால் பணவீக்கம் ஏற்படும்; மானிய திட்டங்களை நிறுத்தும் நிலை உருவாகும். அதற்கு பதிலாக, 3.6 லட்சம் கோடி ரூபாயில், நீர் ஆதாரங்களை மேம்படுத்துவேன்; நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் என, அறிவித்திருந்தால் வரவேற்கலாம். பிரதமர் வேட்பாளராக, ராகுலை வட மாநில மக்கள் ஏற்கவில்லை…
எனவே, போகாத ஊருக்கு வழி செல்வது போல, பொய்யான, சாத்தியமில்லாத வாக்குறுதிகளை ராகுல் அறிவித்து, மக்கள் மனதில் இடம் பெற முற்படுகிறார். அவரது எண்ணம் நிறைவேறாது. நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும், பிரதமர் மோடி தான், மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
– கரு. நாகராஜன்.