மாநகராட்சி உதவி ஆணையர் பணியில் இருந்து விடுவிடுப்பு விவகாரத்தில், மேலிட நெருக்கடியால், மதுரை மாநகராட்சி ஆணையாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளாரா? ஆணையரின் இந்த உத்தரவுக்கு அதிகாரிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மதுரைக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வருகை குறித்து மாநகராட்சியின் பணியமைப்புப் பிரிவின் உதவி ஆணையர் சண்முகம் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அந்தச் சுற்றறிக்கையில், மோகன் பாகவத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அவர் கலந்து கொள்ளும் விழா நடக்கும் இடம் வரையிலான சாலைகளையும், தெரு விளக்குகளையும் சரிசெய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
உதவி ஆணையர் சண்முகத்தின் இந்த உத்தரவை அரசியல் ரீதியாக விமர்சித்து, மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் ட்வீட் பதிவு செய்தார். அவரது சமூகத் தள பதிவுகள், திமுகவுக்கும் , அரசுத் துறை உயர் அதிகாரிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், உதவி ஆணையர் சண்முகம், மதுரை மாநகராட்சி ஆணையருக்கு தெரியாமல் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வியாழன் இரவு வரை உதவி இயக்குனரின் சுற்றறிக்கை சரியானது என்றும் இசட் பிளஸ் பாதுகாப்பில் வருபவருக்கு அவர் செல்லும் பகுதியில் சாலைகளை சீர் அமைப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் விளக்கம் தந்தார்.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் ஆணையாளர் கார்த்திகேயன் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது போல் சுற்றறிக்கையை வெளியிட்ட உதவி ஆணையர் சண்முகத்தை, பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். ஆணையரின் இந்த உத்தரவு அதிகாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறும்போது… மிக முக்கியப் பிரமுகர்கள் யாராவது மதுரைக்கு வரும்போது அவர்கள் செல்லும் பகுதிகளை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி அல்லது வாய்மொழி உத்தரவிட்டு சுத்தமாக இருக்க அறிவுறுத்துவது வழக்கமான ஒன்று.
‘ஏனென்றால் அவர்கள் செல்லும் பாதைகளில் சாலை சரியில்லை குப்பைகள் குவிந்து கிடக்கிறது என்று அவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினால் அது மதுரை மாநகராட்சிக்கு அவப் பெயராக அமையும். அதனைத் தடுக்கவே மிக மிக முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது, சாலை சீரமைப்பு சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த அடிப்படையில்தான் உதவி ஆணையர் செயல்பட்டு சுற்றறிக்கை அனுப்பினார்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை திமுக அரசியல் ரீதியாக எதிர்க்கும் நிலையில் கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி காரணமாக இந்த சுற்றறிக்கை இந்த அளவுக்கு சர்ச்சையாகி கடைசியில் உதவி ஆணையரை பணியில் இருந்து விடுவிக்கும் நிலைக்கு சென்றுள்ளது. முக்கியமாக, மேலிட நெருக்கடியால் தான் மாநகராட்சி ஆணையாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று தெரிவித்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளுக்கு இடையேயான அந்த சுற்றறிக்கை சமூக வலைத்தளத்தில் பரவியதே சர்ச்சைக்கு காரணம். இதற்கு பின்னால் இருப்பவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற துரதிருஷ்டவசமான சம்பவம் எதிக்காலத்தில் நிகழாமல், மதுரை மாநகராட்சியை காப்பாற்ற முடியும்.
இந்துமத தலைவருக்கு ஆதரவாக சண்முகம் செயல்பட்டதாக சித்தரிக்கப்பட்டு இதன் மூலம் தமிழக அரசுக்கு திமுக கூட்டணியில் உள்ள சில அரசியல்வாதிகள் கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். முக்கியமாக மதுரை எம்.பி., சு வெங்கடேசன், மூலம் தான் இது மோசமான அரசியலாக்கப் பட்டது. சு.வெங்கடேசன் சார்ந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களைச் சேர்ந்த ஊழியர்களால் மட்டுமே இந்த சுற்றறிக்கை, வாட்ஸ் அப் வாயிலாக படி எடுக்கப் பட்டு, பரப்பப் பட்டிருக்கும் என்று அதிகாரிகள் மத்தியில் கூறப் படுகிறது.
இந்தியாவில், இசட் பிளஸ் எனப்படும் உயர் பாதுகாப்பில் உள்ளவர்கள் எங்கு சென்றாலும் அதற்காக செய்யப்படும் பாதுகாப்பு , மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் பலிகடா ஆகிவிட்டார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சில
மாநகராட்சி அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.