பிரபல மூத்த வழங்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 95.
வயது முதிர்வு காரணமாக உடல்நலமில்லாமல் இருந்த ஜெத்மலானிக்கு கடந்த 2 வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை காலமானார்.
ராம் ஜெத்மலானி 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சிக்கார்பூரில் பிறந்தார். பிரிவினைக்குப் பிறகு மும்பை வந்தது அவரது குடும்பம்.
18 ஆம் வயதிலேயே சட்டப்படிப்பை முடித்த ஜெத்மலானி, மும்பையில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் முக்கியமான வழக்குகளில் வாதாடி புகழ் பெற்றவர்.
பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ராம் ஜெத்மலானி ஆஜராகியுள்ளார் வாதாடியுள்ளார். எல்.கே. அத்வானி, அமித்ஷா, லாலு பிரசாத் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரின் வழக்குகளில் ராம் ஜெத்மலானி ஆஜராகியுள்ளார். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் ராம் ஜெத்மலானி ஆஜராகியுள்ளார்.
மறைந்த ராம் ஜெத்மலானிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்..