தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்பவர்களை கவர்ந்திழுப்பதற்காக அதிரடியாய் விளம்பர நோட்டீஸ் ஒன்றை அச்சடித்து ஊர் முழுக்க ஒட்டி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது திருப்பூர் பின்னலாடை நிறுவனம் ஒன்று.
திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால், அப்படி அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்பவர்களுக்கு தினந்தோறும் மதிய நேரத்தில் ஒரு கட்டிங் மதுவும், இரவுகளில் குவாட்டர் மது பாட்டில் ஒன்றும், மற்றும் டீ காசுகளும் வழங்கப்படும் என அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திருப்பூர் முழுக்க சுவரொட்டி விளம்பரம் செய்துள்ளார்.
பொருளாதார பின்னடைவு, ஜிஎஸ்டி, தங்குமிட வாடகை அதிகரிப்பு என்று தற்போது பின்னலாடைகளுக்குப் பேர் போன திருப்பூரில், நிறுவனங்களில் பணிபுரிவதற்கு தற்போது போதிய ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. அப்படியே வேலைக்கு யாராவது சேர்ந்தாலும், அதிகபட்சம் ஓரிரு மாதங்களுக்குள் வேறு நிறுவனங்களுக்கு மாறி விடுகின்றனர். இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, துணி ஏற்றுமதியின் அளவும் கணிசமாக குறைந்து நிறுவன முதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இது குறித்து, அந்த பின்னலாடை நிறுவனரிடம் தொடர்பு எண்ணில் பேசிய போது, பலவிதமாக வேலைக்கு ஆட்களைத் தேடிய நிலையில் கடந்த மூன்று மாதங்களாக யாருமே வேலைக்கு வரவில்லை எனவும் இந்த சுவரொட்டி விளம்பரத்தை நகரில் ஒட்டிய அடுத்த சில மணி நேரங்களிலேயே நிறைய பேர் ஆர்வமாக வேலைக்கு வந்து விட்டதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.