தில்லி வன்முறை குறித்து ஒளிபரப்பிய, இரு கேரள செய்தி சேனல்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 48 மணி நேரம் தடை விதித்தது.
வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறைகள் குறித்த தகவல்களுக்காக, வெள்ளிக்கிழமை 7.30 மணிக்கு தொடங்கி, இரண்டு மலையாள செய்தி சேனல்களான ஏசியானெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் ஆகியவற்றை 48 மணி நேரம் தடை செய்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ஒரு சமூகத்தை நோக்கி பக்கச் சார்பாக செய்தி ஒளிபரப்பி, சமூக துவேஷத்தை விதைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. “இது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும் தில்லி போலீஸையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தில்லி போலீஸ் செயலற்று இருந்ததாக குற்றம் சாட்டுகிறது” என்று அந்த உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
1994 விதி 6 (சி) மற்றும் (இ) இன் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்கின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், சேனல்களுக்கு ஒரு விளக்கம் கேட்டு அறிக்கை வழங்கப்பட்டது. செய்தி ஒளிபரப்பும்போது கவனமாக இருந்ததாக அந்த சேனல்கள் அளித்த விளக்கத்தை அமைச்சகம் நிராகரித்தது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தில்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைகளை திட்டமிட்டு, முஸ்லிம் அடிப்படைவாதிகள் கையிலெடுத்து அமெரிக்க அதிபர் வந்த நேரத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டால் உலக கவனம் பெறலாம், மீடியாக்கள் இந்தியாவை அசிங்கப்படுத்தும் என்று திட்டமிட்டு வன்முறைகளை மேற்கொண்டனர். இதற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டுத் தூண்டுதல் இருந்தது பளிச்செனத் தெரிந்தது.
அந்த நேரத்தில், தில்லியின் வர்த்தக நிறுவனங்கள் வீடுகளின் முகப்பில், நோ என்ஆர்சி, நோ சிஏஏ என்ற வாசகங்கள் எழுதப் பட்டன. இவை குறியிடப் பட்ட வீடுகளைத் தவிர மற்ற நபர்களின், குறிப்பாக ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் கொளுத்தப்பட்டன. இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஹிந்து தரப்பினர், தங்கள் மீதான தாக்குதலை எதிர்கொள்ள தாங்களே களம் இறங்கினர். ஆனால் இதனை வட இந்திய ஊடகங்கள் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் என்று வர்ணித்து ஒருதலைப் படமாக செய்தி ஒளிபரப்பு மேற்கொண்டனர்.
குறிப்பாக, கேரள டிவி சேனல்களான மீடியா ஒன் மற்றும் ஏசியா நெட் செய்தி சேனல்கள், பட்சபாதத்துடன் ஒளிபரப்பின என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், 48 மணி நேரம் தடை விதித்துள்ளது.
இந்த தடை, மார்ச் 6 இரவு 7.30 மணி முதல் 8ம் தேதி இரவு 7.30 மணி வரை அமலில் இருக்கும் என உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த இரு டிவி சேனல்களும், வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை ஒளிபரப்பியதுடன், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக ஒளிபரப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேண்டுமென்றே சிஏஏ ஆதரவாளர்கள் வன்முறை நடத்தியதாக மட்டும் ஒளிபரப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு சேனல்களில் ஏசியாநெட் சேனல் மட்டும் தனது வருத்தத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொண்டது. மீடியா ஒன் சார்பில் இதனைக் கண்டித்து அறிக்கைஅனுப்பப் பட்டது. இருப்பினும், மத்திய அரசின் ஒலிபரப்பு அமைச்சகம் இரு சேனல்களுக்கும் விதித்த தடையை விலக்கிக்கொண்டது.
முன்னர் என்டிடிவிக்கும் இது போல் ஒரு தடை விதிக்கப் பட்டது. ஆனால், வெங்கய்ய நாயுடு தலைட்டு, அந்தத் தடையை உடனே விலக்க வைத்தார். இதனால் அதன் ஒளிபரப்பு தடைப்படாமலிருந்தது.