நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் பட பாணியில், கர்நாடக மாநிலம் ஹாவேரியின் ஹங்கல் நகரில், காணொலி காட்சி வாயிலாக பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
ஹுப்பள்ளியில் உள்ள கேஐஎம்எஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவர், காணொலி காட்சி வாயிலாக அறிவுறுத்த, கர்ப்பிணிக்கு பெண்கள் சிலர் வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளனர்.
ஹங்கல் பகுதியில் வசித்து வந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், அங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாத நிலையில், கர்ப்பிணியின் நிலைமை மோசமடைந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தில் வசித்து வந்த பெண்கள், கர்ப்பிணிக்கு தாங்களே பிரசவம் பார்த்துள்ளனர்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வாசவி பட்டேபுருக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் தாங்களே பிரசவம் பார்க்க முடிவு செய்தனர். அதில் ஒரு பெண் கேஐஎம்எஸ் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக இருக்கும் தனது தோழியை காணொலி காட்சி வாயிலாக உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
மருத்துவர் காணொலி வாயிலாக சொல்லச் சொல்ல, அக்கம்பக்கத்து பெண்கள் அதன்படியே பிரசவம் பார்த்தனர். இதனால், அப்பெண் அழகான ஆண் குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார். பிறகு தாயும், சேயும் பத்திரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது பற்றி மருத்துவர் பிரியங்கா மந்தாகி கூறுகையில், நான் சின்ன சின்ன விஷயங்களை மட்டுமே அறிவுறுத்தினேன்.
ஆனால் அங்கே இருந்த பெண்களுக்கு குழந்தை பிறப்பு குறித்து பல விஷயங்கள் தெரிந்திருந்தது தான் சுகப்பிரசவம் வெற்றிகரமாக செய்ய பேருதவியாக இருந்தது. எனது வாழ்நாளில் இப்படியொரு பிரசவத்தை பார்ப்பது இதுவே முதல்முறை என்றும் கூறியுள்ளார்