காற்று வாங்குவதற்காக கதவைத் திறந்து வெளியே வந்து விமானத்தின் இறக்கையில் அமர்ந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
விமானப் பயணம் என்பது மிகவும் கடினமான ஒன்று. சில சமயங்களில் நடுவில் இருக்கும் இருக்கையில் அமர்ந்துகொள்வது, விமானம் தாமதமாக வருவது என பல விஷயங்கள் பயணிகளுக்கு அதிருப்தியை தருவதாக அமைகிறது. இந்த நிலையில், பெண் ஒருவர் விமானத்திற்குள் காற்று சரியாக வரவில்லை என்ற காரணத்தால் எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக வெளியே வந்து விமானத்தின் இறக்கையில் அமர்ந்து காற்று வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி சென்றுவிட்டு, தன் சொந்த ஊர் செல்வதற்காக தன் இரு குழந்தைகளுடன் விமானத்தில் சென்றுள்ளார்.
விமானத்தில் பயணிக்கத்தொடங்கியதில் இருந்தே அந்த விமானம் மிகவும் வெப்பமாக இருந்ததாக அந்த பெண் உணர்ந்துள்ளார். இதனை அடுத்து, துருக்கி பகுதியில் விமானம் தரையிறங்கிய நிலையில், எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக வெளியே வந்து இறக்கையில் சிறிது நேரம் நின்றிருந்து, பின்னர் மீண்டும் விமானத்திற்குள்ளே சென்றுள்ளார்.
விமானம் தரையிறங்கியதால், பயணிகள் வெளியே வந்துகொண்டிருந்த நிலையில், அந்த பெண் இதுபோன்று செய்ததை அங்கிருப்பவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய உக்ரைன் விமான நிலைய அதிகாரிகள், அந்த பெண் உக்ரைன் வழியாக செல்லும் எந்த விமானத்திலும் பயணம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், “அனைவரும் விமானத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக அந்த பெண் மட்டும் இறக்கையில் நடந்துகொண்டிருந்தார். அவரை பார்த்த அவரது இரண்டு குழந்தைகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்” என்று கூறினார்.
மேலும், விமானத்தில் இதுபோன்று செய்ததற்கான காரணம் குறித்து அந்த பெண்ணிடம் கேட்டபோது சரியான காரணத்தை சொல்லவில்லை எனவும் காற்று சரியாக வராததால் வெளியே சென்று காற்று வாங்கியதாகவும் கூறியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.