ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர பல்வேறு நாடுகளில் காணப்படும் கள்ளிச் செடிகள், பெரணி செடிகள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனை காண வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், 2ம் சீசனை முன்னிட்டு தற்போது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் உள்ளன.
இதில், 250க்கும் மேற்பட்ட வகையான மலர் வகைகள் உள்ளன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
மேலும், 12 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அந்த தொட்டிகள் மாடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதனையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்நிலையில், தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்காவில் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.
வனங்களில் காணப்படுவது போல், இங்கும் பாறைகளின் நடுவே பூத்துள்ள இந்த குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு குறிஞ்சி மலர்கள் குறித்து தெரியாத நிலையில், பூங்கா பணியாளர்கள் குறிஞ்சி மலர்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து விவரித்து வருகின்றனர்.
மேலும், சுற்றுலா பயணிகள் இந்த குறிஞ்சி மலர்கள் அருகே சென்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.