ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா செக்டார்(Kupwara sector) எனும் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இதனை ஒரு பொருட்டாக கருதாமல் இந்திய ராணுவ வீரர்கள் அத்தகைய மோசமான வானிலையிலும் தங்கள் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அங்கு பனிப் புயலின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் தில்லாக புயலை எதிர்த்து நிற்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
இத்தகைய கடுமையான பனிப்பொழிவு மற்றும் புயல் காற்றுக்கு இடையில் கம்பீரமாக நாட்டின் எல்லையில் நின்றுக்கொண்டு ராணுவ வீரர்கள் பாதுகாக்கும் வீடியோ PRO Udhampur, Ministry of Defence பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க செய்துள்ளது. இந்திய ராணுவத்தால் பாதுகாக்கப்படும் இந்த இடம், சுமார் 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இதுமட்டுமல்லாது இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை உலகிற்கு எடுத்துரைக்கும் படியான மற்றொரு வீடியோ அண்மையில் வெளியாகி கைதட்டல்களை பெற்றது.
அதாவது ஜனவரி 8ம் தேதி காலை 10.30 மணியளவில், கடுமையான பனிப்பொழிவு மற்றும் ஆபத்தான சாலைகளை கடந்து ஜம்மு காஷ்மீரின் காகர் மலை(Ghaggar Hill) கிராமத்தில் இருந்து போனியார் தெஹ்சில்(Boniyar Tehsil) LOC-ல் ஆபத்தான நிலையில் தவித்த கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று ராணுவ வீரர்கள் அனுமதித்தனர்.
மேலும் கடும் பனிபொழிவு காரணமாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டு இருந்ததால், ராணுவ வீரர்கள் அந்த கர்ப்பிணியை கொண்டு செல்ல பிரத்யேகமாக அவர்களே ஸ்ட்ரெட்சர் (stretcher) செய்து அதில் அவரை வைத்து நடந்து சென்று அப்பெண்ணை பத்திரமாக சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.