உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக நீடித்து வருகின்றன. அவற்றில் கடந்த 2021ம் ஆண்டு வந்த டெல்டா வகையால் இந்தியாவில் 2வது அலை உருவாகி பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.
பல நாடுகளும் தீவிர பாதிப்புகளை சந்தித்தன.
இதன்பின்னர் டெல்டா பிளஸ் வகை வந்தபோதிலும், பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. நடப்பு ஆண்டிலும் கொரோனாவின் டெல்டா வகையே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழலில், ஒமைக்ரான் என்ற புதிய உருமாறிய வகையானது, தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு பின்பு உலக நாடுகளில் பரவ தொடங்கியது. முழு அளவில் தடுப்பூசி செலுத்தியவர்களையும் இந்த ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை.
கொரோனாசோம்னியா பிரச்சினையின் அறிகுறிகளைப் பொறுத்தவரை, தூங்குவதில் சிரமம், தூக்கமே வராமல் இருத்தல், தலைவலி, கவலை, நடு இரவில் தூக்கம் கெடுதல், உடல் அசதி, சோம்பல், மன அழுத்தம், மனகுழப்பம், கவனமின்மை, காரணமில்லா கோபம் போன்ற சிக்கல்கள் இருக்கலாம். பொதுவாக இந்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணம் தூக்கமின்மை தான்.
கொரோனா பரவாமல் தடுக்க பல இடங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாலும், வேலைக்குச் செல்பவர்கள் வீட்டிலேயே இருந்து வேலைகளை பார்க்க வேண்டிய காரணத்தாலும், மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமே கல்வி கற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாலும் மக்களுக்கு ஒரு மாதிரியான மன இறுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் தூங்க முடியாமல் தூக்கமின்மை ஏற்படுகிறது.
கொரோனா காரணமாக வாழ்க்கைமுறையில் திடீர் மாற்றங்கள் காரணமாக பலரும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது.
இணைய சிக்கல், சாதன கோளாறு போன்ற பிரச்சினைகளால் வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்கள் வேலையை முடிக்க முடியாமல் போவதால் ஏற்படும் சிக்கல்களால் மனச்சோர்வு ஏற்படுகிறது.
கொரோனா ஊரடங்கின் காரணமாக இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் ஆன்லைனிலேயே இருக்கின்றனர். டிஜிட்டல் திரையையே பார்த்துக்கொண்டே இருப்பதாலும், கிளப்ஹவுஸ், வாட்ஸ்அப் போன்ற செயல்பாடுகளில் மூழ்கி கிடப்பதாலும் இரவில் தூங்காமல் தவிக்கின்றனர்.
கொரோனாசோம்னியா பிரச்சினைக்கு எதிராக போராட உதவும் சில குறிப்புகள்
காஃபின் போன்ற நச்சுக்களை குடிப்பதை தவிர்த்து இளநீர், பழச்சாறுகள், செம்பருத்தி தேநீர், கொத்தமல்லி, சுக்கு, இஞ்சி தேநீர் போன்ற இயற்கை பானங்களைக் குடிப்பதால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
செயற்கை பானங்களைத் தவிர்ப்பது நல்லது. பழங்கள், காய்கறிகள், கீரைகள் எல்லாமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
தற்போது பெரும்பாலான பணிகள் ஆன்லைல் மூலமே செய்யப்படுவதால், கணினிகள் மற்றும் ஸ்மார்ட் போன்களின் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது.
எனவே, கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் திரைகளை பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்ணை மூடி ஓய்வெடுத்து கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்