வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறும் யாரையும் நம்பி மோசடியில் சிக்காதீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் பணவீக்க பிரச்சினையும், வேலையில்லா திண்டாட்டமும் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.
மேலும் வேலை தேடுவோருக்கு ஒரு வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வேலை தருவதாக கூறி நிறையப் பேர் ஏமாற்றுகின்றனர்.
வருமான வரித்துறை இது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்பவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டு கொண்டுள்ளது.
சமீப காலமாக வருமான வரித்துறையில் பலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடிதங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வருமான வரித் துறையின் குரூப்-பி மற்றும் குரூப்-சி வேலைகள் பணியாளர் தேர்வாணையத்தால் மட்டுமே வழங்கப்படுகின்றன என்று வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே நீங்கள் யாராவது வருமான வரித் துறையில் வேலைக்கு முயற்சிப்பவராக இருந்தால் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் SSC-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பாருங்கள்.
மேலும் யாரையும் நம்பி மோசடியில் சிக்காதீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை செய்துள்ளது. மிக முக்கியமாக தெரியாத லிங்க் எதையும் கிளிக் செய்ய வேண்டாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்த கிளிக் மூலம் நீங்கள் ஒரு பெரிய மோசடியில் சிக்கலாம். மேலும், தெரியாத ஒருவர் உங்களிடம் வந்து வேலை வாங்கி தருவதாக கூறினால் அதை நம்ப வேண்டாம்.
அப்படிப்பட்டவர்கள் உங்களிடம் பணம் வாங்கிவிட்டு ஓடிவிடுவார்கள். எந்தவொரு போர்ட்டலிலும் பணம் செலுத்துவதற்கு முன் முழுமையான தகவலைப் பெற வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.