கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (57). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது
அதில் பேசிய நபர், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு பிரிவில் அதிகாரியாக நான் பணியாற்றி வருகிறேன். நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டின் பண உச்ச வரம்பை உயர்த்தி தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதை உண்மை என்று நம்பிய சதீஷ், அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த நபர் கேட்ட பல்வேறு தகவல்களை சதிஷ் தனது செல்போன் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அத்துடன், கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களையும் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில், சதீஷின் வங்கிக் கணக்கில் இருந்து 86 ஆயிரத்து 369 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ், அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அந்த நபர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ், இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.