
பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்கள் கடைகளில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வர பெற்றுள்ளது.
மேலும் தரமற்ற, காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதில் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்ட வாய்ப்புள்ளது.
அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் குளிர்பானங்களின் தரம் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்வது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
மேற்கொண்ட ஆய்வின் போது, தமிழகம் முழுவதும் 5,777 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டறியப்பட்டது.
மேலும் இந்த ஆய்வில் ரூபாய் 9.02 லட்சம் மதிப்பிலான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 484 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இக்கடைகளில் எடுக்கப்பட்ட குளிர்பான மாதிரிகள் உணவு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பட்டு, தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் வழங்கப்படும் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்து நிலைகளிலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் – 2011 ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மேலும் குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் , தரம் குறித்து ஆய்வு செய்த பின்னரே, நுகர்வோர் விநியோகத்திற்கு அனுப்ப வேண்டும்.
மேலும் குளிர்பான பாட்டில் மீதுள்ள லேபிள்களில், உணவு பாதுகாப்பு துறை உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, நிகர எடை, தயாரிப்பு தேதி,பயன்படுத்தப்பட கூடிய கால அளவு, அனுமதிக்கப்பட்ட இயற்கை நிறங்கள், அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறங்கள் குறித்த தகவல், ஊட்டச்சத்து குறித்த தகவல்,
சைவ மற்றும் அசைவ குறித்த குறியீடு உள்ளிட்ட விபரங்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இதனிடயே, குளிர்பான பாட்டில்களில் காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்கள் குளிர்பான நிறத்திலிருந்து மாறுப்பட்டு, பார்த்தவுடன் தெளிவாக தெரியும் வகையில் அச்சிட குளிர்பான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கடைகளில் குளிர்பானங்களை வாங்கும் போது, மேல் குறிப்பிடப்பட்ட விபரங்கள் உள்ளதா எனவும் குறிப்பாக காலாவதி நாளை சரிபார்த்த வாங்கி உபயோகிக்க வேண்டும்.
தரமற்ற , காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 94440423222 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.