விருதுநகரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு பயிலும் மாணவி யோகாசனத்தில் தேள் வடிவிலான விருச்சிகாசனம் செய்துகொண்டே கியூப் செய்முறையினை மூன்று முறை செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஹர்ஷ நிவேதா ( வயது 14). தனது 5 வயது முதலே யோகா கலையினை முறையாக பயின்று வருகிறார்.
தற்போது தேள் வடிவிலான விருச்சிகாசனம் செய்துகொண்டே கியூப் செய்முறையினை மூன்று முறை செய்தார். அதில் 17.01 வினாடிகளில் இவர் செய்தது சாதனையாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞான கெளரி மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதை பதிவு செய்த அதிகாரிகள் கின்னஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். இம்மாணவி ஏற்கனவே இக்கலையின் மூலமாக இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் சாதனையாளர் விருது, ஆசியா புக் ஆப் சாதனையாளர் விருது மற்றும் ரியல் வேர்ல்ட் ரெகார்ட் உட்பட மாநில தேசிய அளவிலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.
புதிய சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
யோகாவில் அமெரிக்க பெண்ணின் உலக சாதனையை முறியடித்து , விருதுநகர் மாணவி ஹர்ஷ நிவேதா புதிய கின்னஸ் சாதனையை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.