தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா மார்ச் 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
விழாவையொட்டி, கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன.
இந்த விழாவையொட்டி கோவிலில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. முக்கிய நிகழ்வாக குண்டம் விழா இன்று அதிகாலை நடைபெற்றது. இதில், பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது.
இதையடுத்து பண்ணாரி அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இன்றுஅதிகாலை 4.00 மணிக்கு படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அங்குள்ள சருகுமாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, தாரை தப்பட்டை முழங்க, மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து குண்டத்தில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தும் மலர்களை குண்டத்தில் தூவியும் அதிகாலை 4.10 மணிக்கு முதலில்
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. குண்டத்துக்கு பூசாரி முதலில் பூஜை செய்து தீ மிதித்தார். அதனை தொடர்ந்து முதன்மைச் செயலாளர் அமுதா காவல்துறை அதிகாரிகள், உள்ளிட்ட ஏராளமானோர் குண்டம் இறங்கினர்
திரளான பக்தர்கள் பண்ணாரி அம்மனுக்கு அக்னி குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தீ மிதிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். மாலை வரை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
குண்டம் திருவிழாவையொட்டி கோவிலைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நாளை (புதன்கிழமை) புஷ்ப ரதம் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. 28-ந் தேதி நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.