டாட்டா நிறுவனமானது அவ்வப்போது புது புது விஷயங்களை அறிமுகப்படுத்தி தனது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
டாடா-வின் டாடா நியூ (Tata Neu) செயலி இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும், Android மற்றும் iOS இரண்டிலும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் இந்த செயலியை முன்பே பதிவிறக்கம் செய்ய முடிந்தாலும், இதுவரை டாடா நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே அணுகல் இருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது அனைத்து பயனர்களும் ஓடிபி-ஐ உள்ளிட்ட பிறகு, தங்கள் மொபைல் எண்ணிலிருந்து செயலிக்கு பதிவு செய்யலாம். ‘நியூ’ செயலியானது ‘சூப்பர் ஆப்’ என அழைக்கப்படுகிறது. அதாவது இந்த ஆப் மூலம் ஒருவர் அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.
மொபைல் ஃபோனுக்கான கட்டணம் செலுத்துவது முதல் தனிஷ்க் மூலம் நகைகளை வாங்குவது, பிக்பாஸ்கெட் வழியாக ஒருவரின் தினசரி மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வது என அனைத்தையும் இதன் மூலம் செய்து முடிக்கலாம். டாடா குழுமம் அதன் முக்கிய தயாரிப்புகளுக்கான அனைத்து முக்கிய செயல்பாடுகளையும் ஒரே செயலியின் கீழ் கொண்டு வருகிறது.
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன், தனது அதிகாரப்பூர்வ லிங்க்ட்இன் பக்கத்தில், டாடா டிஜிட்டல் உருவாக்கிய செயலி, நிறுவனத்தின் அனைத்து பிராண்டுகளையும் ஒரே சக்திவாய்ந்த செயலிக்குள் கொண்டுவரும் என்று பதிவிட்டுள்ளார்.
“இந்திய நுகர்வோரின் வாழ்க்கையை எளிமையாகவும் எளிதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம். தேர்வு செய்வதற்கான வசதி மற்றும் கட்டுப்பாடு, தடையற்ற அனுபவம் மற்றும் விசுவாசம் ஆகியவை டாடா நியூவின் மையப்புள்ளிகளாக இருக்கும். இது சக்திவாய்ந்த ஒன் டாடா அனுபவத்தை வழங்கும்,” என்று அவர் எழுதியுள்ளார்.
உங்கள் நம்பகமான மற்றும் விரும்பப்படும் பிராண்டுகளான ஏர் ஏசியா, பிக்பாஸ்கட், க்ரோமா, ஐஎஹ்சிஎல், கியூமின், ஸ்டார்பக்ஸ், டாடா 1எம்ஜி, டாடா ஏஐஜி, டாடா கேப்பிடல், டாடா கிளிக், டாடா ப்ளே, வெஸ்ட்சைட் ஆகியவை ஏற்கனவே டாடா நியூ தளத்தில் உள்ளன.
விஸ்தாரா, ஏர் இந்தியா, டைட்டன், தனிஷ்க், டாடா மோட்டார்ஸ், டாடா ஏஐஏ ஆகியவை விரைவில் இதில் சேர உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த செயலியின் மூலம், பயனர்கள் டாடாவின் பரந்த அளவிலான பிராண்டுகளில் இருந்து ஒரே இடத்தில் பொருட்களை ஆர்டர் செய்யலாம். மருந்துகள் முதல் மளிகை சாமான்கள் வரை, விமான நிறுவனங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது முதல் நகைகளை வாங்குவது வரை, அனைத்து செயல்பாடுகளையும் பயனர்கள் இந்த செயலி மூலம் செய்ய முடியும்.
வழக்கமாக இந்த ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி செயலியை பயன்படுத்த வேண்டி இருக்கும். எனினும், டாடா நியூ செயலி மூலம் அனைத்து பணிகளையும் ஒரே தளத்தில் செய்து முடிக்கலாம்.
பிற சேவைகளுக்கான கட்டணங்களையும் இந்த ஆப் மூலம் செலுத்த முடியும். பில்களை செலுத்துவதையும் ஆப் ஆதரிக்கிறது. டாடாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பிராண்டுகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, பயனர்கள் ஒரே ஒரு செயலியில் இருந்து பல்வேறு வகையான அணுகலைப் பெறுகிறார்கள் என்பது கூடுதலான நன்மையாகும்.
மேலும், பலவகையான பொருட்களுக்கு இந்த செயலியில் டீல்கள் மற்றும் தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. இதன் மூலம் அமேசான் மற்றும் பிளிப்கார்டுக்கு வலுவான போட்டியாகவும் இது மாறக்கூடும்.
ஒவ்வொரு முறை இந்த ஆப் மூலம் வாங்கும்போதும், வாடிக்கையாளர்களுக்கு ‘NeuCoins’ வெகுமதியும் அளிக்கப்படுகிறது. தற்போது ஒவ்வொரு NeuCoin-ம் 1 ரூபாய் மதிப்புடையது என்றும், நாணயங்கள் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
ஆப்ஸ் மூலம் டாடாக்ளிக் லக்சரி-ல் பெரிய பர்சேஸ்களை செய்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், பிற பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்தக்கூடிய பல NeuCoin-கள் உங்களுக்கு வெகுமதியாக அளிக்கப்படும்.
கூகிள் பே மற்றும் பேடிஎம் போல, டாடா நிறுவனத்தின் சொந்த யுபிஐ அடிப்படையிலான கட்டணச் சேவையான டாடா பே (Tata Pay) உடன் இந்த செயலி வருகிறது. பயனர்கள் இதன் மூலம் பணம் செலுத்தலாம்,
மின்சாரம், மொபைல், டிடிஎச் போன்றவற்றுக்கான கட்டணங்களை ஒரே இடத்திலிருந்து செலுத்தலாம். மேலும், இவற்றுக்கான வெகுமதியையும் பெறலாம்.
இதுவரை இந்த டாட்டா நியூ செயலியை கிட்டத்தட்ட 2.2 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் பன்சால், ஒரு நிகழ்வின் போது, இந்த சூப்பர் செயலி குறித்து பேசினார். அதில் “பெரும்பாலான நுகர்வோர் நுகர்வு முறைகளை நாங்கள் மறைக்க விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டு பேசினார்.
இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் நுகர்வோர் அளவானது 2030 ஆம் ஆண்டளவில் $800 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது,
மேலும் ஆன்லைன் சில்லறை வர்த்தகம் பெரிய அளவில் இருக்கும் என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ரெட் சீர் (RedSeer) தெரிவித்துள்ளது. நாட்டின் ஆன்லைன் சில்லறை விற்பனை சந்தையானது அடுத்த பத்தாண்டுகளில் மொத்த விற்பனை மதிப்பில் 350 பில்லியன் டாலராக வளர வாய்ப்புள்ளது.
டாட்டா டிஜிட்டலின் சிஇஓ, பிரதிக் பால் கருத்துப்படி, இந்த புதிய செயலி 120 மில்லியன் யூசர்கள், 2,500 ஆஃப்லைன் கடைகள் மற்றும் 80 மில்லியன் பயன்பாட்டு தடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், “எங்களிடம் எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், பயணம், விருந்தோம்பல், மளிகை பொருட்கள், மருந்தகம் மற்றும் நிதிச் சேவைகள் வரையிலான பல முன்னணி நுகர்வோர் பிராண்டுகள் உள்ளன. டாடா நியூ செயலியுடன் மிகவும் வேறுபட்ட நுகர்வோர் தளத்தை உருவாக்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என பிரதிக் பால் தெரிவித்தார்.
இத்துடன் இந்த செயலியானது ஏர்ஏசியா இந்தியா, பிக் பாஸ்கெட், க்ரோமோ, ஸ்டார்ப்பக்ஸ், டாடா 1mg, டாட்டா கிளிக், டாடா பிளே, வெஸ்ட் சைட், IHCL, Qmin உள்ளிட்ட பல பிராண்டுகளின் தாயகமாக அமைகிறது.