இந்தியா – வங்காளதேசம் எல்லையில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடைபெறுவதும், வங்காளதேசத்தில் இருந்து பலரும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறுவதும் நடைபெறும் காரணத்தால் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக வந்து சென்ற வங்காளதேச பதின்ம வயது சிறுவன் ஒருவனை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
அவர் இந்தியாவிற்குள் நுழைந்த காரணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஏமன் ஹொசைன் என்ற அந்த வங்காளதேச இளைஞர் இந்தியா- வங்காளதேச எல்லையில் உள்ள ஷால்டா ஆற்றின் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்த ஆறு இரு நாட்டிற்கும் இடையேயான சர்வதேச எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏமன் ஹொசைன் இந்த ஆற்றில் நீந்தி இந்திய எல்லையான திரிபுரா மாநிலத்தில் உள்ள சிபாஹிஜாலா மாவட்டத்திற்குள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இந்தியாவிற்குள் நுழையும் இவர் தனக்குப் பிடித்த சாக்லேட்களை வாங்கிச் சாப்பிட்டு வந்துள்ளார்.
ஆற்றின் வழியே நீந்தி இந்திய- வங்காளதேச எல்லையில் உள்ள தடுப்பில் உள்ள சிறு துளை வழியாக சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள கலம்சௌரா கிராமத்திற்கு வந்து, தனக்குப் பிடித்த சாக்லேட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் தான் வந்த பாதையிலே வங்காளதேசம் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி எல்லைப் பாதுகாப்பு படையினர் ஏமன் ஹொசைனை பிடித்து, அங்கே உள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
உள்ளூர் போலீசார் அந்த சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில், அவனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.