ஒரு விண்வெளி அதிசயம், வரும் மே 15ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
வானத்திலிருந்து ஒரு விண்கல், மணிக்கு சுமார் 37,400 கிலோமீட்டர் வேகத்தில் நம் பூமிக்கு மிக அருகில் வரவிருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இந்த எரிகல், அமெரிக்காவில் உள்ள பிரம்மாண்டமான எம்பயர் கட்டடத்தின் அளவுக்கு பெரிதாக இருக்கும் என்றும் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
388945 (2008 TZ3) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிகல் தொடர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது. இந்த எரிகல் வரும் மே 15ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பூமிக்கு மிக அருகில் வரவிருக்கிறது.
நாசாவின் நியர் எர்த் ஆப்ஜெக்ட் (என்.இ.ஓ) என்றழைக்கபப்டும் அமைப்பு இந்த எரிகல் சுமார் 1,150 அடி முதல் 2,560 அடி விட்டம் கொண்டதாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.
இந்த எரிகல், பூமியில் இருந்து சுமார் 3.2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் புவியைக் கடக்கும் என்றும், இதனால் பூமியில் உள்ள மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
என்ன தான் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை என்றாலும், இந்த எரிகல்லை நாசா தொடர்ந்து கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டு இதே எரிகல் பூமியில் இருந்து 1.7 மில்லியன் மைல் தொலைவில் கடந்தது குறிப்பிடத்தக்கது.
பூமி எப்படி சூரியனைச் சுற்றி வருகிறதோ, அப்படி எரிகற்களும் பூமியைச் சுற்றி வருகின்றன. அப்படி வட்டமடித்து வரும் எரிகற்களில் 388945 (2008 TZ3) எரிகல்லும் ஒன்று.
இந்த எரிகல் வரும் 2024ஆம் ஆண்டு மீண்டும் பூமிக்கு மிக அருகில் வரும். ஆனால் சுமார் 6.9 மில்லியன் மைல் தொலைவிலேயே புவியைக் கடந்து விடும்.
மீண்டும் இந்த எரிகல், இப்போது வருவது போல பூமிக்கு மிக நெருக்கமாக வர வேண்டுமானால், மனிதர்கள் குறைந்தபட்சம் 2163ஆம் ஆண்டு வரையாவது காத்திருக்க வேண்டும் என அறிவியல் சமூகம் கூறுகிறது.