கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மே 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற மலைகளின் இளவரசி, கோடை வாசஸ்தலம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகை தருகின்றனர்.
மேலும் கோடைகாலத்தில் இங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். மேலும் கோடைகால குளு, குளு சீசனையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நடைபெறும்.
இந்த விழாவில் தோட்டக்கலைத்துறை சார்பாகவும், சுற்றுலா துறை சார்பாக மலர் கண்காட்சி நடத்தப்படும்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக மலர்கண்காட்சி நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த வருடம் மலர் கண்காட்சியை நடத்துவதற்கும், கோடை விழா நடத்துவதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மே 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மே 24 முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை கோடை விழா நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார் .