மத்திய பிரதேச மாநிலத்தின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை விசாரிக்க சேலம் விரைந்தனர்.
சம்பந்தப்பட்ட சிறுவன் உருவாக்கிய பாட்கள் போபால் மற்றும் பெங்களூருவை சேர்ந்த பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் மென்பொருள் துறையில் ஆர்வம் மிக்கவர் ஆவார். இவர் பைத்தான் ப்ரோகிராமிங் மூலம் உருவாக்கிய பாட் ஒன்றை, தனக்கு டெலிகிராம் மூலம் அறிமுகமான வெளிநாட்டவருக்கு 200 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்து 541 விலைக்கு இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் விற்பனை செய்து இருக்கிறார்.
பள்ளி மாணவரிடம் பாட்-ஐ வாங்கிய நபர் தான் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இண்டர்நெட் பாட், இணைய ரோபோட், ரோபோட் அல்லது பாட் என்பது மென்பொருள் செயலி ஆகும்.
இது இணையத்தில் தானியங்கி முறையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட செயல்முறைகளை சரியாக பின்பற்றும். இது மனிதனுக்கு மாற்றாக இணைய பணிகளை மேற்கொள்ளும். இதை கொண்டு அதிகளவு குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.
முன்னதாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த போபால் போலீஸ் குழுவினர் மே 16 ஆம் தேதி வாக்கில் சேலம் வந்தனர்.
அங்கு பாட்-ஐ விற்பனை செய்த மாணவரின் வீட்டிற்கு சென்று பெற்றோரை சந்தித்து நடந்த சம்பவம் பற்றி விளக்கினர். வீட்டிற்கு போலீசார் வருவதை பார்த்து அதிர்ந்து போன மாணவரின் தாய் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
அதன் பின் மாணவரை விசாரணைக்காக போபால் அழைத்து வர போலீசார் தெரிவித்துள்ளனர்.:
“காவல் துறை குழுவினர் அங்கு சென்றதும், பெற்றோர் தங்களுக்கு இதுபற்றி எந்த விவரமும் தெரியாது என பதில் அளித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சிறுவன் மைனர் என்பதால் அவரை கைது செய்யவில்லை. அந்த மாணவர் திறமை மிக்க பைத்தான் ப்ரோகிராமர் ஆவார். தான் உருவாக்கிய பாட் இதுபோன்ற தீய செயலுக்கு பயன்படுத்தப்படும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.”
“மாணவரிடம் டெலிகிராமில் தொடர்பு கொண்டு பாட்-ஐ வாங்கிய நபர் யார் என விசாரணை செய்து வருகிறோம். மேலும் இது போன்று வேறு ஏதேனும் பாட்களை மற்றவர்களுக்கும் விற்பனை செய்து இருக்கிறாரா என மாணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரிகள் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது,” என குற்றப் பிரிவு டி.சி.பி. அமித் குமார் தெரிவித்து இருக்கிறார்..