பீகார் மாநிலத்தில் நாளந்தா என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் ஒரு 15 வயது சிறுவன் அமித்ராஜ் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தார். .
அப்போது ஒரு வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே நின்று கொண்டு கதறி அழுதுள்ளனர்.
அவர்களிடம் அமித்ராஜ் சென்று கேட்டபோது வீட்டிற்குள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறியுள்ளனர். உடனே அந்த சிறுவன் யோசிக்காமல் வீட்டிற்குள் சென்று அங்கிருந்த 2 குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றி விட்டார்.
அப்போது அவருடைய உடம்பில் 85% தீப்பிடித்து விட்டது. இருப்பினும் அதைப் பற்றி கவலைப்படாமல் அமித்ராஜ் மறுபடியும் வீட்டிற்குள் சென்று மற்றொரு குழந்தையையும் காப்பாற்றி விட்டார்.
இதனையடுத்து அந்த சிறுவனை அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி அமித்ராஜ் உயிரிழந்துவிட்டார். தன் உயிரையும் நினையாது தீரத்துடன் தீயுடன் போராடி 3 குழந்தைகளை மீட்ட சிறுவன் அமித்ராஜின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.