![இலங்கை… வரலாறு காணாத ரகளை! சபாநாயகர் மீது மிளகாய்ப் பொடி வீசி… தாங்கள் யார் என்பதைக் காட்டிய ராஜபட்ச ஆதரவாளர்கள்! 1 rajapaksha parliament2](https://dhinasari.com/wp-content/uploads/2018/11/rajapaksha-parliament2.jpeg)
இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றாவது நாளாக அமளி துமளி ஏற்பட்டது. சபாநாயகர் மீது ராஜபட்ச எம்.பிக்கள் மிளகாய் பொடி வீசி தாங்கள் யார் என்பதைக் காட்டினார்கள். இலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீசப்பட்ட நிலையில் ராஜபட்சவுக்கு எதிராக மற்றொரு நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் நிறைவேறியது.
இலங்கையில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது. ஆனால் இந்த இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ஏற்க அதிபர் சிறீசேன மறுத்து விட்டார்.
இந்நிலையில் மூன்றாவது நாளாக வெள்ளிக் கிழமை நேற்று மதியம் இலங்கை நாடாளுமன்றம் கூடிய போது, சபாநாயகர் கரு ஜெயசூரியா வரலாறு காணாத அளவில் நூற்றுக் கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் வந்தார். அப்போது ராஜபட்ச ஆதரவு எம்.பி.க்களுக்கும் ரணில் விக்ரமசிங்க ஆதரவு எம்.பி.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.
திடீரென சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்ற ராஜபட்ச எம்.பிக்கள் மிளகாய்ப் பொடியை தூக்கி வீசினர். இந்த கூச்சல் குழப்பத்துக்கு நடுவே ராஜபட்ச மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதில் தீர்மானம் வெற்றி பெற்றதாகவும், நாடாளுமன்றம் மீண்டும் 19-ஆம் தேதி கூடும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
இந்த நிகழ்வுகள், சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப் பட்டன. எம்,.பி.க்கள் அடிதடி ரகளையில் ஈடுபடுவதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டவர்கள், 18 வயசுக்கு குறைந்தவர்கள் பெண்கள் / இதய நோய் உள்ளவர்கள் இந்த வீடியோக்களைப் பார்க்க வேண்டாம் / என்று கேட்டுக் கொண்டனர்.
மகிந்த ராஜபட்சவின் கட்சி எம்பிக்களின் செயல் இது. நாடாளுமன்றமே இப்படியென்றால் நாடு கிடைத்தால்? மக்களின் வரிப்பணம் / குங்குமம் மிஞ்சினா குருக்கள் குன்டில தடவுவானாம்! என்று கிண்டல் அடித்தார்கள்!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற சபாநாயகரின் அரியாசனத்தை மிளகாய் மகிந்தா ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மிளகாய் பொடி கொண்டு சுத்தம் செய்யும் வேளை… என்று சொல்லி இந்த வீடியோக்களைப் பகிர்ந்தனர்…
இலங்கை நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த புதிய குத்து சண்டை காட்சிகள் வைளியீடு காணத்தவறாதீர்கள் என்று சொல்லி, குத்துச் சண்டைக் காட்சிகளுக்கான பின்னணிக் குரலுடன், வீடியோ பதிவிட்டார்கள்.