தென்காசி: கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். இதை ஒட்டி, குற்றால அருவியில் அதிகாலை 4 மணிக்கே நீராடி, அருகில் உள்ள பிள்ளையார் கோயில் முன், குருசாமி மாலை எடுத்து அணிவிக்க, பக்தர்கள் பலர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து கொண்டனர்.
மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக விரதம் இருந்து பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்வது வழக்கம். கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் “சுவாமியே சரணம் ஐயப்பா” முழக்கத்துடன் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
குறிப்பாக, குற்றாலத்தில் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் புனித நீராடி, குருசாமிகளின் கையால் மாலை அணிந்து கொள்வர். இந்த சபரிமலை சீஸனில் குற்றாலம் வந்து அருவியில் புனித நீராடி, ஐயப்பனின் ஆறு படைவீடுகளான ஆரியங்காவு, அச்சங்கோவில், குளத்துபுழ, பந்தளம், எரிமேலி, சபரிமலை செல்வர்.
இதை முன்னிட்டு, இன்று காலை குற்றாலம் அருவிக் கரையில் பக்தர் கூட்டம் அலைமோதியது.