“வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெட்கமில்லை…” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார்.
கமலை போலவே ராமதாஸின் ட்வீட்கள் இப்போது சரிவர புரியாமல் போய்விட்டது. ஏற்கனவே பேரிக்காய் பழம் பற்றி ஒரு ட்வீட் போட்டார். “பேரிக்காய் பழுக்கும் வரை காத்திருக்க மனமில்லாத ஒருவன் தினமும் மரத்தையே பார்த்து கொண்டிருந்தான். அவன் கட்டாயப்படுத்தி பழுக்க வைக்க முயன்றால் பழம், மரம் இரண்டும் நாசமாகி விடும். பொறுமையுடன் காத்திருந்தால் பழுத்த பழம் அவனது மடியில் விழும்! – ஆப்ரஹாம் லிங்கன், அமெரிக்க முன்னாள் அதிபர்.” என்று பதிவிட்டார். இவர் யாரை சொல்கிறார், எதை சொல்கிறார், என்ன சொல்கிறார் என்றே புரியாமல் இருந்தது.
திமுக கூட்டணியில் இணைய அன்புமணி செய்யும் முயற்சி தனக்கு வருத்தமளிக்கிறது என்ற தனது ஆதங்கத்தை கட்சியினரிடம் இவ்வாறு வெளிபடுத்துகிறாரா ராமதாஸ் என கட்சியினருக்கே குழப்பமோ குழப்பம்!
இந்நிலையில் ராமதாஸின் அடுத்த டீவிட்….! அதில், “வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெட்கமில்லை. இதற்கான விளக்கத்தை நான் சொல்லத் தேவையில்லை. அரசியல் அறிந்தவர்கள், நாளேடு படிப்பவர்கள், பிரேக்கிங் செய்தி பார்ப்பவர்கள் என அனைவருக்கும் இதற்கான பொருள் புரியும்!” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிலும் ராமதாஸ் யாரை சொல்கிறார், எதைச் சொல்கிறார் என தெளிவாக தெரியவில்லை. யார் பெயரையும் குறிப்பிட்டும் சொல்லவில்லை. ஆனால் இன்றைய நாளில் பரபரப்பாக உள்ள செய்தி திமுகவில் செந்தில் பாலாஜி இணைவதுதான். ஆனால் இதிலும் ஒரு குழப்பம் உள்ளது.
திமுகவில் கூட்டணி வைக்க பாமக என்னவோ முயற்சி செய்தும், அதை திமுகதான் நிராகரித்து விட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், வெட்கமில்லை என்று ராமதாஸ் சொல்வது, கட்சியில் இணைபவரையா? இணைத்துக் கொள்பவரையா என தெரியாமல் அனைவரையும் வழக்கம்போல் சுத்தவிட்டுள்ளார்.