காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேற்றைய தினம் ஒரு காவல் துறை அதிகாரியை பொது வெளியில் நாக்கில் நரம்பில்லாமல் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கத்து.
காவல்துறை அதிகாரி தவறே செய்திருந்தாலும், பொது மக்கள் முன்னிலையில் கன்னியக்குறைவாக நடந்து கொண்டது கொடூரமானது. இப்படி அநாகரீகமான அவரின் அந்த துடிப்புக்கு , கோபத்திற்கு காரணம் என்ன என்பதை அவரின் வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன.
மிக முக்கிய நபர்கள், அமைச்சர்கள் வர இருக்கும் நிலையில் எப்படி ‘நீ’ சிலரை அனுமதிக்கலாம் என்று கேட்டிருப்பது அவரின் அதிகார துஷ்பிரயோகத்தையே வெளிப்படுத்துகிறது.
மேலும், முக்கிய நபர்கள், மிக முக்கிய நபர்களுக்கான அனுமதியை ஆட்சியர் அலுவலகமே கொடுத்து வருகிறது என்பதாக தெரிகிறது. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான முக்கிய நபர்களை ஆட்சியரோ அல்லது ஆட்சியர் அலுவலகமோ அடையாளம் காண்பது எப்படி சாத்தியமாகிறது?
மேலும் யார் மிக முக்கிய நபர்கள் என்பதை எந்த அடிப்படையில் முடிவு செய்கிறது ஆட்சியர் அலுவலகம்? ‘பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம்’ என்ற நபருக்கு மிக முக்கிய நபர் அந்தஸ்தை கொடுத்தது யார் ? என்ற என் கேள்விக்கு இன்று வரை விடை அளிக்கவில்லை?
ஒரு சில நபர்களை அனுமதித்த தவறுக்காக ஒரு காவலரை பணியிடை நீக்கம் செய்ய துடிக்கும் ஆட்சியர், பல உயிர்கள் போனதற்கு பொறுப்பேற்க வேண்டுமா? வேண்டாமா? ஒரு ஆட்சியர் பொறுமையாக கையாள வேண்டிய விவகாரத்தை பொறாமையோடு கையாள்வது முறையா? இது தான் இந்திய ஆட்சி பணியின் கட்டுப்பாடா?
அத்திவரதர் குளத்திலிருந்து எழுந்தருளியது முதல் இன்று வரை மக்களிடையே பல்வேறு குழப்பங்கள், இடர்பாடுகள், துன்பங்கள், இன்னல்கள் உண்டாவதற்கு பொறுப்பேற்க வேண்டிய ஆட்சியர், மிக முக்கிய நபர்களுக்காக, மக்களை காக்கும் காவல் அதிகாரியை மக்களின் முன்னேயே ஏளனமாக, அவதூறாக பேசுவது எந்த விதத்திலும் ஏற்கத் தக்கதல்ல.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தவறிழைத்து வருவதோடு, நிர்வாகமின்மையை வெளிப்படுத்தி வருவதும், மக்கள்டவும், காவல்துறையோடும், கோவில் பணியாளர்களோடும் மோதல் போக்கை கையாண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழக முதல்வர் அவர்கள் அத்திவரதர் விழாவில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகள், நிர்வாக கோளாறுகள் குறித்து தீவிர விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனி இது போன்ற விழாக்களில் மிக முக்கிய நபர்கள் என்ற அனுமதி முறையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு மிக முக்கிய நபர்களாக கருதப்படுபவர்கள் ரூபாய்.5000 /- கட்டணம் செலுத்தி இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
அப்படி செய்தால் மிக முக்கிய நபர்கள் காணாமல் போய், அதிகார துஷ்பிரயோகம் இல்லாத நிலை ஏற்படும். மேலும், மிக முக்கிய நபர்கள் (?) செலுத்தும் கட்டணத்தை பொது மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உபயோகப்படுத்த வேண்டும்.
அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் இந்த நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டும். இல்லையேல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் நம்பிக்கைகளை சிதைக்கும் வண்ணம் செயல்படும் யாராக இருந்தாலும் தங்களின் சுயநல திருவிளையாடல்களை நிறுத்தி கொள்ளவேண்டும். இல்லையெனில் இறைவனின் திருவிளையாடலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
– நாராயணன் திருப்பதி (பாஜக., பிரமுகர்)