மகாசதாசிவ மூர்த்தி:
இத்திருவுருவம் சிவனது அறுபத்து நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகும். இவர் கைலாயத்தில் இருப்பவர்.இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே, இவரை நாம் மகா சதாசிவ மூர்த்தி என்கிறோம்.
அந்த கைலையில் இவரைச் சூழ்ந்தவாறே இருபத்தி ஐந்து மூர்த்திகளும் உள்ளனர்.மேலும் இவரைச் சூழ்ந்தவாறு ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் உள்ளனர்.
அனைவருமே மகாசதாசிவ மூர்த்தியை வணங்குகின்றனர். இவரை புராணங்கள் கைலாயத்தில் உள்ளவராகச் சொல்கின்றன.
மேலும் மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவரை அனுக்கிரக மூர்த்தி என்றேக் கொள்ளுதல் வேண்டும்.
இவரை இன்ன உருவம் தான் எனக் கூற முடியாது. அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன. இவரை நாம் தரிசிக்க செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரமாகும்.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இவரை கோவிலுள் காண முடியாது. சுரகரேஸ்வரர் கோவில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும்.
மேலும்,மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் அங்கயற்கண்ணி அம்மையின் கிழக்கு முதற் கோபுரத்திலும், வைத்தீசுவரன் கோவில் கோபுரம்,தில்லைக் கோவில் கோபுரம் ஆகியவற்றில் சுதை வடிவில் மகா சதாசிவ மூர்த்தி வடிவம் காணப்படுகிறது.
இவரை வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால் இவரை அபிஷேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம் ஆரோக்கியம் பெறும் என்றும் கூறப்படுகிறது.