சென்னை தங்கசாலை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் சந்திப்பில் மூன்று கடைகளில் திடீரென இன்று அதிகாலை விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே மெட்ரோ பணிகளால் ராட்சத குழாய்கள் அமைக்கும் பணியின் போது பயங்கர சத்தத்துடன் இயந்திரங்கள் இயக்கப்படுவதால் நில அதிர்வு ஏற்பட்டு பொருட்கள் கீழே விழுவதாக மெட்ரோ ரயில் திட்ட மேலாளர்களுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாருக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று திடீரென்று 3 கடைகளில் விரிசல் ஏற்பட்டு கடையும் கீழே இறங்கியது. இதனையடுத்து பொதுமக்கள் மெட்ரோ ரயில் கட்டுமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.