மலைக்கோயில் மாயன் (மாஆயன்) திருவிழா: ஆயர்கள் அவர்களது இறைவன் மாஆயன் (மாயன்) சம்பந்தப்பட்ட விழாவாக விளங்குகிறது சித்ரா பௌர்ணமி.
துர்வாசரால் சபிக்கப்பட்ட மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கவும், ஆண்டாள் நாச்சியார் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொள்ளவும் வைகை எழுந்தருள்கிறார் ஶ்ரீ அழகுமலையான்.
ஶ்ரீ அழகுமலையான் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது ஆண்டாள் நாச்சியார் சூடிக் கொடுத்த மாலையை அணிந்தே இறங்குகிறார். ஆண்டாள் நாச்சியார் அழகரை சுந்தரத் தோளுடையான் என்று பாடுகிறார். ஆண்டாளின் இந்த மாலையை ஏழுமலையானும், அழகுமலையானும் அணிந்தே பரவசப் படுகிறார்கள். ஏழுமலையானும், அழகுமலையானும் ஆண்டாள் தாயார் காதலித்த இடையனான கண்ணனாகவே பார்க்கப் படுகிறார்கள்.
வடமதுராவில் கண்ணனைக் கொண்டாடுவதை போல தென்மதுராவில் அழகரை ஆயர்கள் கொண்டாடுகிறார்கள்! தமிழ்நாட்டில் அதிக அளவில் மக்கள் கூடும் பிரசித்தி பெற்ற கண்ணன் கோயில், ஆண்டாள் நாச்சியார் அமர்ந்த கோலத்தில் அருளும் கோயில் அழகர்கோயில் தான்! மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோயிலில் மட்டுமே பெருமாள் பஞ்ச ஆயுதங்களை (சங்கு, சக்கரம் ,வில், கதை, வாள்) தாங்கி காட்சி தருகிறார்.
பஞ்சஆயுதங்கள் பதித்த தாலியை அணியக்கூடிய கோனார்கள் பஞ்சாரத் தாலிகட்டி (அ) பஞ்சாரங் கட்டி கோனார்கள். பஞ்சாரங் கட்டி கோனார்கள் மதுரையை (தேனி, சிவகங்கை சுற்று வட்டாரங்களை உள்ளடக்கிய மதுரை (பாண்டியநாடு) பூர்வீகமாக கொண்டவர்கள்..
கோனார்களின் தலைவனாக மாயனான ஶ்ரீ அழகுமலையான் விளங்குகிறார். இங்குள்ள கோனார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு முதல்மொட்டை அழகருக்கு போட்டுவிட்டு பிறகு தான் குலதெய்வத்திற்கு மொட்டை போடுவார்கள். கோனார்களின் முக்கியத் தொழிலாக ஆடு, மாடு வளர்ப்பு உள்ளது. கோனார்கள் ஶ்ரீ அழகுமலையானுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து, திரியெடுத்து, தோப்பை எனப்படும் ஆட்டுத்தோலினால் செய்யப்பட்ட பையில் மஞ்சள் சந்தனம் கலந்த நீரை நிரப்பி அதைத் தங்கள் தலைவன் ஶ்ரீமாயன் மீது பீச்சி அடித்து மகிழ்வர்!
மதுரை மட்டுமல்லாமல் சித்ரா பௌர்ணமியன்று தென்தமிழ்நாட்டில் வைகைக் கரையோரம் அமைந்திருக்கும் அனைத்து பெருமாள் கோயிலில் உள்ள உற்சவர் அழகராக வெள்ளிக் குதிரை ஏறி யாதவர்கள் தலைமையில் வைகை ஆற்றில் எழுந்தருள்வர்!
ஏறுதழுவுதல், மகரத் திருநாள், கபடி போன்ற பல பண்பாட்டையும், கலாச்சாரங்களையும் திருவிழாக்களையும் தமிழுக்கு தந்த ஆயர்களுக்குத்தான் இத்திருநாளில் நன்றி சொல்ல வேண்டும்!
- மதுரை கா.ராஜேஷ்கண்ணா