மனிதனுடைய வாழ்க்கையிலே இப்படி ஒரு விசித்திரமான குணத்தை நாம் காண்கிறோம். தனக்கெது வேண்டுமோ அதனுடைய சாதனத்தை அனுஷ்டிப்பதில்லை. தனக்கெது வேண்டாமோ அதனுடைய சாதனத்தை முயற்சி செய்து அனுஷ்டிக்கிறான்.
புண்ணியம் என்றால் தர்மம். தர்மத்தின் பலனான சுகத்தை எல்லோரும் விரும்புவார்கள். ஆனால், தர்மத்தை ஆச்ரயிக்க மாட்டார்கள். பாபத்தின் பலனான துக்கத்தை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால், பாபத்தை மாத்திரம் எல்லோரும் செய்து கொண்டிருப்பார்கள்.
பகவான் கீதையிலே ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராய்தே மஹதோ பயாத் என்று சொன்னார். தர்மத்தை ஆச்ரயிக்க வேண்டும். அது வாஸ்தவம் ஆனால், உன்னால் அதை ஸம்பூர்ணமாக ஆச்ரயிக்க முடியா விட்டாலும் எந்த அளவிற்கு உன்னால் ஆச்ரயிக்க முடியுமோ அந்த அளவிற்கு ஆச்ரயித்தாலும் உனக்கு நல்லது.
அதேபோல் பகவான் கீதையின் மற்றோரிடத்திலே சொன்னார். “நீ ஆச்ரயிக்க வேண்டிய தர்மம் எது உண்டோ அதைச் செய்யும் விஷயத்தில் கொஞ்சம் குறைவு வந்தாலும் பரவாயில்லை, அதை நீ செய்யத்தான் வேண்டும்.” அப்படி இருக்கின்றபோது, “எனக்கு முழுவதும் செய்ய முடியாததனால் விடுவதுதான் நல்லது என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்வது எவ்வளவு தவறான செயல்!
அதனால் அப்பேற்பட்ட வார்த்தைகள் நம் வாயிலிருந்து வரக் கூடாது. நம்மால் முடிந்த அளவிற்கு நாம் தர்மத்தை ஆச்ரயிக்கத்தான் வேண்டும்.