சின்னதம்பி கும்கியா?
அதுவொரு அழகான காடு. அதற்கு பத்மவனம் என்பது பெயர். நல் பூந்தோட்டங்கள் நிறைந்தும், சுவையான தண்ணீர் வசதிகளுடனும் கூடிய அந்தக் காட்டில், கூட்டமாக பல யானைகள் வசித்து வந்தன. செழுமையான கரும்புகள், இளம் மூங்கில் குருத்துக்கள் என தங்களின் விருப்பமான உணவுகளை உண்டு களித்திருந்தன. அந்தக் காட்டில் அவைகளை கட்டுப்படுத்துபவர்களே இல்லை. ஆனந்தமான ஆகாரத்துடன், ஆரோக்யமான சூழலில், அமைதியான வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்த அவைகளுக்கு, சமீபகாலமாக பல சோதனைகள் உண்டாயின.
மக்கள் தொகை பெருக்கத்தைக் காரணம் காட்டி காடுகளை அழிக்கத் தொடங்கிவிட்டனர். அரசாங்கமும் இயற்கையின் இந்தப் பேரழிவைக் கண்டு தடுக்க முயல்வதாகக் காணோம். இதைத் தேடிச் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் ஆக்ரமிக்கப்பட்டன. உணவும், குடிநீரும் இல்லாமல் யானைகள் பெரும் துயரத்தில் தள்ளப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை எழில் கொஞ்சும் காட்டின் பரப்பளவு சுருங்க ஆரம்பித்தது. நீர் ஆதாரத்திற்கான வழிகள் அடைபட்டன. இவற்றினிடையே மீண்டுமொரு பெரும் விபரீதம் விளைந்தது.
ஒருநாள் நகரத்தைச் சேர்ந்த சில மனிதர்கள் பெரும் கயிறு, மிகப்பெரிய யந்திரங்கள், கோடரி, வில், கடப்பாறை முதலிய ஆயுதங்களுடன் காட்டிற்கு வந்தனர். யானைக் கூட்டம் பயந்தது. தங்களுக்கு நேர உள்ள பெரும் ஆபத்தினை உணர்ந்தன யானைகள்.
சில வயது முதிர்ந்த யானைகள் உடனடியாக ஒரு கூட்டத்தை கூட்டின. “எம் இன மக்களே! இஃதொரு இன மான எழுச்சிப் போராட்டம்! நம் வாழ்வாதாரத்தை அழித்த கயவர் கூட்டம் இப்போது மொத்தமாக நம் இனத்தையே அழிக்க வந்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக இவர்களின் அடக்குமுறையில் நாம் ஒடுக்கப்பட்டு வந்துள்ளோம். இதோ! பெரும் கயிறுகள், நெருப்பு, யந்த்ரம், வாள், வேல் என அனைத்தையும் கொண்டு நம்மை அடக்க முயல்கின்றனர். வீரம் விளைந்த மண்ணில் பிறந்த நாம் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். ஆனால் நம்பிக்கை த்ரோகத்தைத்தான் தாங்க முடியாது.”
இவ்விதம் துதிக்கையை உயரத் தூக்கி வீர முழக்கமிட்ட யானைகள், மேலும் கூறின: “இங்கே பாருங்கள்! நம்மைப் பிடிக்க நம் இனத்தவர்களே உதவி செய்கின்றனர்! பெரும் பலசாலிகளாக இருந்தும், மக்களால் பிடிக்கப்பட்டு, பழக்கப்பட்டு, அவர்களின் கட்டளைப்படி நடக்கும் இந்த பழகிய (கும்கி) யானைகள்தான் ஆபத்து மிகுந்தவை. இவைகள், நம்மைப் பிடிக்கும் வழிமுறைகளை மனிதருக்குக் காண்பித்துக் கொடுக்கின்றன. இந்தப் பழகிய (கும்கி) யானைகளின் துணையில்லையென்றால் மனிதர்களால் நம்மை நெருங்கவே முடியாது. இந்த உலகில் பங்காளிகள்தான் பெரும் பகையாளிகள்“ என்று வெகு அழகாக உபதேசித்தன.
அதனால்தான் பங்காளிகளை (உறவுகளை) நம்பலாகாது. “ஏ விபீஷணா!! நீயும் அதுபோன்றவன்தான். என்னைப் பிடிப்பதற்காக ராமனுக்கு உதவி செய்கிறாய்“ என்று ராவணன் விபீஷணனைப் பார்த்து வசை பாடினான். இந்த அழகான கும்கி யானை கதையைச் சொன்னவன் இலங்கேச்வரனாகிய ராவணன் (யுத்த காண்டம் – 16ம் ஸர்கம்). ராவணனுடைய இரண்டு தம்பிகளில் பெரிய தம்பி கும்பகர்ணன்; சின்ன தம்பி விபீஷணன். தன் சின்ன தம்பியை, ராமன் பழக்கிய கும்கி யானையாக ராவணன் வர்ணித்தான். இதனால் மனம் நொந்த சின்ன தம்பி விபீஷணன், ராமனிடம் அடைக்கலமானான். ராமனும் கடற்கரையில் Save சின்னதம்பி – “விபீஷணனைக் காப்பாற்றுவேன்“ என்றான்.
அன்புடன்,
ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.
Sri .APN Swami
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்..