காஞ்சி அத்திவரதர் உத்ஸவம் இப்போது பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. தற்போது சயனக் கோலத்தில் காட்சி தருகிறார் ஆதி அத்திவரதர். இன்னும் சில நாட்களில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.
தற்போது பக்தர்களுக்கு அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு வாய்ப்பும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் குறட்டை விட்டு சயனத்தில் இருக்கிறது. லட்சக்கணக்கில் மக்கள் வந்து தட்டி எழுப்புகிறார்கள். ஒவ்வொரு நாளும் சராசரியாக லட்சம் பேர் சேர்ந்து எழுப்பும் அவலக் குரலைக் கேட்டு நிர்வாகம் எப்போது துயில் கலைந்து எழப் போகிறது என்பது தெரியவில்லை. அத்திவரதர் நின்ற கோலத்தில் எழுந்தருளும் முன், நிர்வாகம் எழுந்து கொள்ளுமா என்பது தெரியாது.
இந்நிலையில், அத்திவரதரை தரிசித்து விட்டு வரும் பக்தர்கள் தங்கள் உள்ளக் குமுறலைக் கொட்டித் தீர்க்கிறார்கள்! விஐபி.,க்கள் போல் நேரடியாகச் சென்று தரிசித்துத் திரும்ப வழியின்றி, நின்று கடந்து நடந்து சென்று நின்று மீளவேண்டிய நிலையில் பொதுஜனம் உள்ளது. அப்படிப்பட்ட தங்கள் அனுபவங்களை பலர் பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் கருத்து இது…
அத்தி வரதர் தரிசன ஏற்பாடுகளுக்கு நாங்கள் கொடுக்கும் மதிப்பெண் பூஜ்யம். ரொம்ப முடியாதவர்களை வயதானவர்களை கூட்டிச் செல்வது பற்றி யோசித்துக் கொள்ளுங்கள். வாட்ஸ் அப்/பேஸ்புக் forward செய்தியை நம்பாதீர்கள்.
எங்கள் அநுபவம் மிக மோசம். முதியவர்களுக்கான பேட்டரி கார்களைப் பற்றி அவர்களுக்குச் செய்யப் பட்டுள்ளதாகச் சொல்லப்படும் வசதிகள் பற்றி எந்த அறிவிப்புப் பலகையும் கிடையாது. May I help you என்று உட்கார்ந்திருக்கும் காவல்துறை நபர்களுக்கும் தெரியவில்லை. பதில் சொல்ல யாருக்கும் பொறுமையும் இல்லை.
நாங்கள் தாம்பரம் படப்பை வழியாக சென்றோம்.பச்சையப்பா கல்லூரி அருகே எல்லா வாகனங்களும் திருப்பப்பட்டு பாா்கிங் ஏரியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.
அங்கு மாவட்ட நிர்வாகம் ஒரு ஹெல்ப் டெஸ்க் அமைத்து இந்த இந்த வசதிகள் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ளது என்பதை சொல்லுவாா்கள் என்று எதிர்ப்பாா்த்தேன் ஒரு தகவலும் இல்லை. அங்கிருந்து மினி பஸ்/ஆட்டோ வசதியுள்ளது.ஆனால் அது க்யு வரையில்லை.
ஒரு 200மீட்டர் முன்பே நிறுத்திவிடுகிறாா்கள். பின்பு க்யுவிற்க்கு நடக்க வேண்டும்.மிக நீளமான க்யு ஒரு கிலோமீட்டர் உள்ளே நடக்க வேண்டும். நடக்கவே முடியாதவர்கள்/மாற்று திறனாளிகள் என்ன செய்வாா்கள்.
வீல் சேர்/பேட்டரி காா்களை பேருந்து நிறுத்தம்/காா் பாா்க்கிங் ஏரியாவில் வசதி செய்து கொடுத்தால் தான் அவர்களால் வர இயலும்.கோபுர வாசலில் தான் கிடைக்கும் என்பது சரியான நிர்வாகமில்லை,அது வரை அவர்கள் எப்படி வருவது.
நாங்கள் மட்டுமல்ல அத்தனை பேரும் திட்டித் தீர்க்கிறார்கள் டிவி செய்திகளையும் வாட்ஸ்அப் செய்தி பரப்பியவர்களையும்.
இன்று புதன் காலை அத்தி வரதர் தரிசனத்துக்கு நாங்கள் குடும்பமாக ஒரு பன்னிரண்டு பேர் கொண்ட குழுவாகச் சென்றோம். வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் டி.வி செய்திகளின் அடிப்படையில் சிறிதளவு கூட நடக்க , ஐந்து நிமிடம் நிற்க இயலாத முதியவரை( 75 வயது) கூட்டிச் சென்றோம்.
ஆனால், முதியோர்களுக்குத் தனியாக என்று எதுவுமே இல்லை.ஆறு மணி நேரம் க்யூவில் ஒரே தள்ளுமுள்ளுவில் தள்ளிக் கொண்டு போய்த்தான் தரிசனம் செய்ய வைத்தோம். வீல் சேர்/பேட்டரிகாா் கிழக்கு கோபுர வாசலுக்கு வந்தால் வெகு நேரத்திற்க்குளபிறகு கிடைக்கின்றது. பேட்டரி கார்கள் இயங்குவதை கோபுரவாசல் தாண்டி நான்கைந்து மணி நேரக் க்யூவிற்குப் பிறகு காண நேர்ந்தது.
பேட்டரி கார் பற்றி விசாரித்தால் பதில் யாருக்கும் தெரியவில்லை. பின்னால் இருப்பவர்கள் தள்ளித்தள்ளி விடுவதில் பன்னிரண்டு பேரும் தனித்தனி தீவாகி விட்டோம் . காலை ஏழு மணிக்கு க்யூவில் நின்ற நாங்கள் தரிசனம் பாா்க்கும் போது மணி பகல் 01:15 pm.
இதில் தரை முழுவதும் குட்டிக்குட்டி கற்கள் நிறைந்த மணல். நடக்க சிரமம். அது போக கோசாலை வழியாகக் குறுகிய வரிசையில் செல்லும் இடத்தில் தரை முழுதும் சின்னஞ்சிறு கூழாங்கல் போன்ற தினுசில் ஆனால் சிறிது கூர்மையான கற்கள் பாதங்களைப் பதம் பார்க்கிறது.
காற்று இல்லை. ஒவ்வொருவரும் வியர்வையில் குளித்து அதை அடுத்திருப்பவர் மீதும் இழைத்து….ஐயோ கொடுமை. அவ்வப்போது குபீர் குபீரெனக் கிளம்பும் வியர்வை நாற்றம் குடலைப் புரட்டிக் கொண்டு வந்தது.
குறுகிய கம்புத்தடுப்பு வரிசைக்குள் செல்லும் போது மட்டும் குடி தண்ணீரைப் பிளாஸ்டிக் குவளைகளில் விநியோகித்தனர். கிட்டத்தட்ட ஆறு மணிநேரக் காத்திருப்பு. திருப்பதியில் காத்திருப்பது போல் அல்ல. தள்ளுமுள்ளும் வியர்வைநாற்றமும் கடுமையான இடநெருக்கடியும் கால்களுக்குகக் கற்கள் கொண்ட பாதையும் அநுபவிக்க வேண்டும்.
வரிசைகளில் நிற்கும் போது தண்ணீர் மட்டும் ஆங்காங்கே விற்கிறார்கள். சில இடங்களில் குடிநீர்க்குழாய்கள். தாகம் தொண்டையை வறட்டி எடுத்தாலும் தண்ணீர் அருந்த பயம்.
தண்ணீரைக் குடித்துவிட்டால் அதை சிறிது நேரத்தில் இறக்கியாக வேண்டுமே… க்யூவில் இருந்து வெளியேறவோ மீண்டும் உள்ளே நுழையவோ முடியாது.
நாக்கு வறண்டாலும் தண்ணீர் குடிக்க பயந்தோம். வடக்கு கோபுர வாசல் வழியாகவும் பொது க்யு அனுப்பப்படுகிறது. அத்தி வரதர் சயனத்திலிருக்கும் வஸந்த மண்டபத்தில் மிக குறுகிய நுழைவாயில் ஒரே தள்ளுமுள்ளு,நெரிசல்கள் அவ்விடத்தில் மிக ஜாக்ரதை. க்யுவின் இடதுபக்கம் வரதருக்கு சற்று அருகே செல்கிறது.அதற்க்காக அந்த பக்கம் நெரிசல்கள் அதிகம்.
எங்கெல்லாம் போலீஸ் தேவையோ அங்கெல்லாம் போலீஸ் இல்லை. ஒரு அவசரம்,ஆபத்து என்றால் வரதர்தான் காக்க வேண்டும். பொதுமக்களே க்யுவை வழிநடத்தி செல்கிறாா்கள். நிர்வாகம் பத்து நாட்களுக்கு பிறகும் ட்ரையல்/அண்ட் எரா் மோடிலேயே உள்ளது.
ஆங்காங்கே தண்ணீர் பாட்டில் சமோசா என விற்றுக் கொண்டிருந்தனர். தரிசனத்திற்க்கு செல்லும் ஆண்கள் அங்கவஸ்திரம்/மேல் துண்டு அணிந்து செல்லுங்கள் வெய்யில் வியர்வையிலிருந்து தப்பிக்கலாம். பெண்கள் காட்டன் உடைகள். கையில் குடையிருக்கட்டும் வெய்யிலோ/மழையோ பயன்படும்.
வாட்டர் பாட்டில்,பிஸ்கெட்,,பழம் முதலியவைகள் இருக்கட்டும். கிழக்கு கோபுர வாயில் வரை கடைகள் உள்ளன.டீ/காபி,வாட்டர் பாட்டில் கிடைக்கின்றன. பிளாஸ்டிக் பவுச் ஒன்று வைத்துக்கொள்ளுங்கள் மழை நேரத்தில் மொபைல் போனிற்க்கு உதவும்.
காலணி பாதுகாக்க தனியிடமில்லை. காா் பாா்கிங்லிருந்து வெளிவரும் போது ரூ.50/- கட்டணக் கொள்ளையும் உண்டு. ஜெயலலிதா இருந்தால் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பாா் என்று சிலர் பேசிக் கொண்டனர். அன்னதான ஏற்பாடுகள் ஏதேனும் உண்டா என்று தெரியவில்லை.நாங்கள் ஒரு மடத்தில் சொல்லி வைத்திருந்தோம்.
காலை 4மணிக்கு க்யுவில் நின்றால் வெய்யிலை தவிர்க்கலாம் 8 மணிக்கு வந்து விடலாம் என்கிறாா்கள்.முயன்று பாருங்கள். இன்று இரவு 10 மணிவரை தரிசனம் உண்டாம்.
நிறைய,நிறைய பொறுமை வேண்டும், புலம்பல்களை தவிருங்கள். இத்துணை இன்னல்களுக்கு பிறகு கிடைத்த அத்தி வரதரின் தரிசனம் மன மகிழ்ச்சியை அளித்தது.
ஆனால் மட்டமான நிர்வாகத்தால் பக்தர்கள் அவதி அடைகிறாா்கள். உள்ளூர்வாசிகளும் நம் ஊருக்கு வரும் பக்தர்களுக்கு சரியான வசதிகள் செய்ரப்படவில்லையே என்று தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்துக்கொண்டாா்கள். மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலைத்துறையும் கைக்கோா்த்து செயல்படவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டாா்கள்.