மயூரகவி எழுதிய ஸ்தோத்திர காவியம் சூரிய சதகம். சதகம் என்றால் நூறு சுலோகங்களால் ஆன நூல். மகிமை வாய்ந்த இந்த நூல் சமஸ்கிருத சாகித்யத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. ‘லட்சண’ கிரந்தங்களில் அலங்காரம் பற்றிக் கூறும்போது மயூரகவியின் சூரிய சதகத்தை உதாரணமாகக் கூறுவார்கள்.
அனைத்து அலங்கார இலக்கணங்களுக்கும் இந்த நூல் ஆதாரமாக உள்ளது. காளிதாசர் போன்ற மகாகவி களுக்குச் சமமான இடம் பெற்றவர் மயூர கவி. தண்டி கவி இவருடைய சமகாலத்தவராக கருதப்படுகிறார்.
சூரிய சதகம்:-சூரிய சதகம் சூரியனின் முக்கியத்துவத்தை கூறும் ஒரு உபாசனை நூல். இதில் பல அற்புதங்கள் உள்ளன. ஸ்துதி என்றால் வாக்கு வடிவம். வாக்கிற்கு உள்ள சக்தியே மந்திரம். மௌனமாக மந்திரத்தினை மனனம் செய்தாலும்கூட காப்பாற்றுகிறது என்று பார்க்கையில் வாக்கிற்கு எத்தனை சக்தி உள்ளது என்று தெரிகிறது.
சூரிய பகவான் தேஜஸ் வடிவானவன். அவனுக்கும் வாக்கிற்கும் தொடர்பு உள்ளது. வாக்கு தேஜஸ்ஸின் சூட்சும அம்சம். வாக்கு அக்னி சொரூபம். தேஜஸ் வடிவான சூரியனுடைய அருளைப் பெறுவதற்கு அவனுடைய சூட்சும ரூபமான வாக்கு வழியே அவனை மகிழ்விக்க முடியும். சூரிய பகவானை வாக்கு வழியே துதித்து மகிழ்விக்க இயலும்.
தேவர்கள் அனைவரும் கூட அவனை துதிகளால் மகிழ்விக்கிறார்கள். யக்ஞத்தில் நெய் ஊற்றினால் அதற்கு வாக்கு வடிவிலான மந்திரம் கலந்தால்தான் அது தேவதைகளைச் சென்றடையும். வாக்கு இல்லாவிட்டால் வேலையும் இல்லை. பலனும் இல்லை. வாக்கு சூரியனின் சொரூபம்.
சூரிய சதகத்தில் வாக்கு வடிவத்தில் சூரியனின் அற்புதமான சொரூபத்தை வர்ணிக்கிறார் மயூரகவி. இதில் காட்டியுள்ள கற்பனை வெறும் உணர்ச்சிகளால் இன்றி வேதக் கருத்துக்களையே கூறியுள்ளார்..
இதில் உபயோகித்த சொற்கள் கூட சாதாரணமானதல்ல. கேட்பதற்கு சங்கீதம் போல் ஒலிக்கும். வாயார கூறிக் கொண்டே இருந்தால் சில நோய்கள் கூட குணமாகும். அப்படிப்பட்ட அற்புதமான ஸ்லோகங்களின் சதகம் இது.
சதகம் இரண்டு விதங்கள். ஒன்று முக்தகம். இரண்டு பிரபந்தம். முக்தகம் என்றால் அடுத்த ஸ்லோகத்தின் தேவையின்றியே ஸ்லோகத்தை கூறுவது. சூரிய சதகத்தை முக்தக சதகம் என்பார்கள். பிரபந்தம் என்றால் முன், பின் செய்யுட்களோடு தொடர்பு கொண்டு எழுதப்படுபவை.
முக்தக முறை செய்யுளில் ஒவ்வொரு ஸ்லோகமும் தன்னளவில் கருத்து முழுமை கொண்டிருக்கும். வேறு ஒரு ஸ்லோகத்தோடு சம்பந்தமின்றி இருக்கும். இவ்வாறு இயற்றுவது மிகவும் கடினம்.
சூரிய கிரணங்கள் உலகிற்கு ஐஸ்வரியங்களை அளிக்கட்டும் என்று ஓர் இடத்திலும் சூரிய கிரணங்கள் எங்களின் நோய்களை நீக்கட்டும் என்று வேறு ஒரு இடத்திலும் கூறுவார். இவ்வாறு ஒவ்வொரு ஸ்லோகத்திலும் ஒரு கோரிக்கை இருக்கும்.
எனக்கு ஏதாவது கொடுப்பாயாக என்று அல்லாமல் உலக நன்மைக்காக என்று கூறுவது போல் காணப்படுவதால் சூரிய பகவான் இவருக்கு நன்மை விளைவிக்கிறான்.
மயூர கவிக்கு பெரிய நோய் ஒன்று வந்ததாகவும் நூறு சுலோகங்களைக் கூறிய உடனேயே நோய் நீங்கி விட்டதாகவும் கூறுவர். இதுபோன்ற மகிமைகளை இப்போதும் அனுபவிப்பவர்கள் உள்ளார்கள்.
சூரிய சதகத்தை மொத்தம் ஆறு பாகங்களாக சாஸ்திரீயமாக மிக அழகாக இயற்றியுள்ளார் மயூர கவி. முதலில் சூரிய பிரபையின் வர்ணனை. பிரபை என்றால் காந்தி. பின்னர் அஸ்வ வர்ணனை. அதாவது சூரியனுடைய குதிரைகளைப் பற்றிய வர்ணனை. சாரதியான ‘அனூரன்’ பற்றிய வர்ணனை. அடுத்து ரத வர்ணனை, மண்டல வர்ணனை, புருஷ வர்ணனை என்று ஆறு பாகங்கள்.
இந்த வர்ணனை மொத்தமும் ஆகம, நிகமங்களை அனுசரித்து இயற்றியுள்ளார். அப்போதைக்கப்போது எழுந்த ஸ்பூர்த்தியால் இயற்றினாலும் இதுபோன்ற விஷயங்களை எத்தனையோ காலம் உபாசனை செய்திருந்தால் மட்டுமே கூற இயலும்.
இதில் அவர் எடுத்தாளும் சந்தஸ் ‘ஸ்ரக்தரா’ சந்தஸ். இதற்கும் வேதத்தின் சந்தஸ்ஸுக்கும் தொடர்பு உள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு அட்சரத்தின் எண்ணிக்கைக்கும் சூரியனோடு தொடர்பு உள்ளது. இவ்வாறு 21 அட்சரங்கள் “த்ரி சப்தஸ் ஸமிதக்ருதா” என்ற கருத்தை விவரித்த வண்ணம் ஏழு அட்ஷரங்களுக்கு ஒரு இடைவெளி வீதம் வருகிறது.
கணபதிக்கும் சூரியனுக்கும் இருபத்தோரு என்ற எண் மிகவும் விருப்பமானது. இது ஸ்ரக் – தர – மாலையை அணிந்த சந்தஸ் என்று கூறப்படுகிறது. “ஸ்ரக்தரன்” என்று போற்றினால் ‘கிரணமாலி’ யான சூரிய பகவான் நமக்கு தரிசனம் அளிப்பார்.
அத்தகைய சிறந்த ‘ஸ்ரக்தர’ சந்தஸ்ஸையே மாலையாகச் செய்து பரமாத்மாவுக்கு சமர்ப்பித்துள்ளார் மயூரகவி.
நூறு சுலோகங்களில் 43 ஸ்லோகங்கள் பிரபை வர்ணனை செய்துள்ளார். பிரபை வர்ணனையின் சிறப்பு என்னவென்றால் உஷத் காலத்தோடு சேர்ந்து சூரிய பிரபையும் வளருகிறது. இளம் வெயிலில் தொடங்கி தீட்சணமான உச்சி வெய்யில் வரையிலும், பின்னர் மீண்டும் சூரியன் மறையும் ஒளி வரையும் பிரபைகளில் ஏற்படும் மாற்றங்களையும் பலவித அம்சங்களையும் இந்த ஸ்லோகங்களில் விவரிக்கிறார்.
உதாரணத்திற்கு ஒரு சுலோகம் பார்க்கலாம்.
ஜம்பாரதீ பகும்போ த்பவமிவ ததத – ஸ்ஸாந்த்ர சிந்தூர ரேணும்
ரக்தாஸ்ஸிக்தா இவௌமை – ருதய கிரிதடீ தாதுதா ராத்ரவஸ்ய
ஆயாந்த்யா துல்ய காலம் – கமல வனருசே: – வாருணா வோ விபூத்யை
பூயாஸுர்பாஸயந்தோ – புவனமபினவா – பாஸவோ பான வீயா: ||
பொருள்: ஜம்பாசுரனுக்கு எதிரியான இந்திரனின் வாகனம் ஐராவதம். அந்த ஐராவதத்தின் தலைமீது அலங்காரமாக சிந்தூரத்தை தெளித்திருப்பார்கள். அந்த சிந்தூரத்தை எடுத்து வருகிறானா என்பது போல் உதிக்கின்ற சூரியனின் சிவப்பான ஒளி இருக்கிறது. முதலில் ஆகாயத்தில் தோன்றி அதன்பின் அந்தரிக்ஷம் அதன் பின் பூமிக்கு வருகிறான் சூரியன், உதய பர்வதத்தின் மேல் சிகப்புத் தங்கம் முதலான தாதுக்கள் உருகும்போது சிவப்பாக இருக்கும். அவ்வாறு சூரியன் பூமியின் மேல் படும் போது அந்த மலையின் ‘கைரிகம்’ என்ற சிவப்புத் தங்கம் போன்ற தாதுக்களின் சிவப்பு ரசத்தை எடுத்துக் கொண்டு வருகிறானா என்பது போல் உள்ளது உதய காலத்து சூரிய ஒளி. அதே சமயத்திலேயே தாமரைகள் மலர்கின்றன. அவ்வாறு மலரும் சிவப்பு நிறம் கூட அவன்தான் அளிக்கிறானோ என்பது போல் இருக்கும்.
ஐராவத சிந்தூரம், உதயகிரி மலை மீது உள்ள ‘கைரிக தாது’ திரவம், தாமரைகளின் சிவப்பு நிறம்…. இவ்வாறு கூறுவதில் ஒரு வரிசைக் கிரமம் உள்ளது. ஆகாயம், உதயகிரி, தாமரைகள்…
இவற்றின் மேல் சூரியஒளி படரும் அழகு அது. சூரியன் தன் சிவப்பு நிற ஒளியை முதலில் காண்பிக்கிறான். இந்திரன் என்று தொடங்குவதில் ஒரு சிறப்பு உள்ளது. சூரியன் உதிப்பது கிழக்கில். அந்த திசைக்கு அதிபதி இந்திரன். சில ஸ்லோகங்களில் சூரியனை விஷ்ணு சொரூபமாகக் காட்டி, நீயே திருவிக்ரமன் என்கிறார். இது வேதத்தோடு தொடர்பு கொண்ட தரிசனம்.
சூரிய சதகத்தின் தாக்கம் கொண்ட இரு நூல்கள்:
சுதர்சன சதகம்:-நாராயண கவி என்ற வைணவ பக்தர் சூரிய சதகத்தை போலவே சுதர்சன சதகத்தை இயற்றியுள்ளார். அதுவும் நூறு சுலோகங்களோடு ‘ஸ்ரக்தரா’ சந்தஸ்ஸில் இயற்றப்பட்டுள்ளது.
சுதர்சன சதகத்தின் நடை கூட சூரியசதகம் போலவே இருக்கும். சூரிய சதகத்தை படிப்பது எத்தனை கடினமோ சுதர்சன சதகம் கூட படிப்பதற்கு அத்தனை கடினமானது. கஷ்டத்தில் உள்ள மாதுர்யம் சிலருக்கு இஷ்டமாக இருப்பதைக் காண்கிறோம். சுதர்சன சதகத்தில் ஓர் இனிமை உள்ளது. அதை பாராயணம் செய்பவர்களிடம் கூட அதன் தாக்கம் இருக்கும்.
ஸ்ரீநாத மகாகவி:-தெலுங்கில் ‘ப்ரௌடகவி’ யான ஸ்ரீநாத மகாகவியிடம் சூரிய சதகத்தின் தாக்கம் காணப் படுகிறது.
அவர் சூரிய சதகத்தில் உள்ள பல சுலோகங்களை மொழிபெயர்த்து தன் பிரபந்தத்தில் இணைத்துள்ளார். ஸ்ரீநாத மகாகவி எழுதிய காசீ கண்டம் என்ற பிரபந்த நூலில் சூரிய வர்ணனைப் பகுதியில் இவற்றை விவரித்துள்ளார்.
காசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை. சூரிய சதகத்திற்கு தகுந்தாற்போல் எழுத வேண்டுமானால் ‘சிந்தாமணீ சரஸ்வதி’ உபாசகரான ஸ்ரீநாத மகாகவியால் மட்டும்தான் முடியும்.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்